தோண்டத் தோண்ட வரும் பிணங்கள்: நேபாளத்தில் பலி எண்ணிக்கை 5000ஐ தாண்டியது
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மீட்பு குழுவினர் இதுவரை 5 ஆயிரத்து 57 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் சுமார் 10 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொடும் என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். போதிய உபகரணங்கள் மற்றும் நிபுணர்கள் இல்லாததால் கிராமங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் நூற்றுக்கணக்கானோர் இடிபாடிகளில் இன்னும் சிக்கியுள்ளனர். தலைநகர் காத்மாண்டு தான் நிலைகுலைந்து போயுள்ளது.
காத்மாண்டுவில் திரும்பும் பக்கம் எல்லாம் பிணங்களாக உள்ளதுடன் மக்களின் அழுகுரல் எந்நேரமும் கேட்கிறது. இந்நிலையில் ஏராளமானோர் காத்மாண்டுவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
நேபாளத்தில் 14 லட்சம் பேர் போதிய உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications