இடிபாடுகளில் இருந்து இனி யாரையும் உயிருடன் மீட்க வாய்ப்பு இல்லை: நேபாள அரசு அறிவிப்பு
காத்மண்டு: நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து இனி யாரையும் உயிருடன் மீட்க வாய்ப்பு இல்லை என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 25-ந்தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டிப்போட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை சந்தித்துள்ள நேபாளம், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் கட்டிட இடிபாடுகளும், பொதுமக்களின் மரண ஓலங்களுமாகவே காணப்படுகின்றன. இந்த பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,600 ஆக அதிகரித்துள்ளது என்று நேபாள உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மி பிரசாத் தாகால் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இனி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் 20 நாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி யாரேனும் உயிருடன் உள்ளனரா என்று கண்டறிய மோப்ப நாய்கள் உதவியுடன் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications