நிவாரணம் இல்லை: காத்மாண்டுவில் கலவர தடுப்பு போலீசாருடன் மோதிய மக்கள்
காத்மாண்டு: காத்மாண்டுவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் திடீர் என்று வன்முறையில் ஈடுபட்டதால் அவர்களுக்கும் கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தலைநகர் காத்மாண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு நிலைகுலைந்து போயுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி 6வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் பிணங்களாக மீட்கப்படுகின்றனர். இந்நிலையில் மீட்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதாகவும், நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறி மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

உணவு
நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் உணவு, குடிக்க நீரின்றி பல இடங்களில் தவித்து வருகிறார்கள். வெட்டவெளியில் தங்கியிருக்கும் மக்கள் கடுங்குளிரை தாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

காத்மாண்டு
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் புதன்கிழமை ஏராளமானோர் தலைநகரை விட்டு வெளியேற பேருந்து நிலையங்களுக்கு சென்றனர்.

போராட்டம்
பேருந்துகளில் ஏற நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் பேருந்து கிடைக்காததால் மக்கள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் அந்த வழியாக வந்த வாகனங்களை தாக்கி சேதப்படுத்தினர்.

போலீசார்
போராட்டக்காரர்களை அடக்க கலவர தடுப்பு போலீசார் அங்கு வந்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களில் சிலர் அந்த வழியாக வந்த டிரக்கை வழிமறித்து அதில் இருந்த தண்ணீர் பாட்டில்களை எடுத்து மக்களுக்கு அளித்தனர்.

ரத்ததான முகாம்
நேபாளத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவ இந்தியாவின் பல்வேறு நகரங்களில் புதன்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் போலீசார், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.












Click it and Unblock the Notifications