உருக்குலைந்த நேபாளம்... பலி எண்ணிக்கை 10,000-ஐ எட்டும்: பிரதமர் கொய்ராலா அதிர்ச்சி தகவல்
காத்மண்டு: நேபாளத்தை நிலைகுலைய வைத்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கலாம் என்று அந்நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ராலா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் அதிகாரப்பூர்வமாக 4,352 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள நாட்டில் கடந்த சனிக்கிழமையன்று மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 80 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அந்த தேசமே நிலைகுலைந்து போனது.

நேபாள உள்துறை அமைச்சகத் தகவலின்படி அதிகாரப்பூர்வமாக இதுவரை 4,352 பேர் உயிரிழந்துள்ளனர். 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் சுஷில் கொய்ராலா இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்களுக்கு மிகவும் சவாலான நேரம் இது.. இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும்; வெளிநாடுகளிடம் இருந்து அனைத்து உதவிகளையும் கோரியுள்ளோம் என்றார்.
80 ஆண்டுகளுக்கு முன்னர் 1934ஆம் ஆண்டு இதேபோல் மிகப் பயங்கரமான நிலநடுக்கத்தை நேபாளம் சந்தித்தது. அதில் 8,500 பேர் பலியாகினர். தற்போது இதனைவிடவும் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என பிரதமர் கொய்ராலா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications