தைவான் விமான விபத்தில் காயமடைந்து நேதாஜி உயிரிழந்தார்... இங்கிலாந்து இணையதளம் தகவல்
லண்டன்: தைவான் விமான விபத்தில் ஏற்பட்ட காயத்தினாலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததாக இங்கிலாந்து இணையதளம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை வேண்டி காந்தியடிகள் அகிம்சை வழியில் போராடினார். அதே நேரம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டன் ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போரிட்டது.
இந்நிலையில், தைவானில் கடந்த 1945ன் ஆண்டு நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்தார் என்றும், இல்லை அதற்குப் பின்னரும் அவர் உயிருடன் வாழ்ந்தார் என்றும் இருவேறு தகவல்கள் கூறப்படுகின்றன. தொடர்ந்து நேதாஜியின் மரணம் குறித்து மர்மம் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப் படவில்லை.

போஸ் பைல்ஸ்...
இந்த சூழ்நிலையில், நேதாஜியின் விமான விபத்தின் போது நடந்தவைகள் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதளமான www.bosefiles.info தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.

விமான விபத்து...
கடந்த ஜனவரி 4-ம் தேதி நேதாஜியின் இந்த விமான பயணத்திற்கு முந்தைய நாள், அதாவது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்த ஆவணங்களை இந்த இணையதளம் வெளியிட்டது.

சாட்சிகள்...
அதனை தொடர்ந்து, தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியானது.

நேதாஜியுடன்...
அதில், "1945 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காலை ஜப்பான் நாட்டு விமான படையின் வெடிகுண்டு வீசுகிற வீரர் வியட்நாமின் டோரனேவில் இருந்து விமானத்தை எடுத்துள்ளார். அந்த விமானத்தில் நேதாஜியுடன் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர். அதில், ஜப்பான் ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் சுனமாசா ஷிடை உடனிருந்தார். ஹிட்டோ-தைபை-டைரென்-டோக்கியோ பாதை வழியாக அந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேதாஜியின் மரணம்...
அதனை தொடர்ந்து விமான விபத்தன்று நடந்த சம்பவங்களை ஆவணங்களாக அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில், விமான விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தான் நேதாஜி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதி...
மேலும், நேதாஜியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர், 2 ஜப்பான் மருத்துவர்கள், மொழி பெயர்ப்பாளர், ஒரு தைவான் செவிலியர் ஆகிய 5 சாட்சியங்கள் இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications