“இல்லாததை பற்றி பேசாதீங்க..” பாலஸ்தீனத்தை அங்கீகரித்த பிரிட்டன், கனடாவுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்!
டெல் அவிவ்: சுதந்திர பாலஸ்தீனத்தை பல்வேறு நாடுகள் அங்கீகரிக்க தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக நேற்று அறிவித்திருந்தன. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாலஸ்தீனம் என்று ஒன்று கிடையாது என்று கூறியுள்ளார்.
சுதந்திர பாலஸ்தீனத்திற்காக போராடி வருபவர்களை தொடர்ந்து இஸ்ரேல் ஒடுக்கி வருகிறது. இந்த அழுத்தத்தில் உருவான ஹமாஸ் எனும் ஆயுதம் தாங்கிய அமைப்பு, கடந்த 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. எப்போதாவது இப்படியான சம்பவம் நடக்குமா? அதை சாக்காக வைத்துக்கொண்டு பாலஸ்தீனத்தை முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாமா? என்று யோசித்து வந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அக்.7 தாக்குதல் லட்டு மாதிரி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அன்று தொடங்கி இன்று வரை பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இஸ்ரேல் தீவிரமாக இருக்கிறது. இதற்காக இதுவரை 63,000க்கும் அதிகமான பொதுமக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்திருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளும், பெண்களும்தான். இந்நிலையில், உலகம் முழுவதும் இஸ்ரேல் நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள், தற்போது பாலஸ்தீனம் பக்கம் நின்றுள்ளன.
இந்நிலையில் நேற்று இந்த மூன்று நாடுகளும் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக ஏற்றுக்கொண்டன. இதுதான் இந்த பிரச்சனையை தீர்க்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், மூன்று நாடுகளின் முடிவும் இஸ்ரேலை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. ஆஸ்திரேலியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆஸ்திரேலியா சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கிறது. இதன் மூலம், பாலஸ்தீன மக்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து, வானத்துக்கும் பூமிக்கும் குதித்த இஸ்ரேல் பிரதமர், பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இருக்காது. "எங்கள் நிலத்தின் இதயப் பகுதியில் ஒரு பயங்கரவாத நாட்டைத் திணிக்க நடக்கும் சமீபத்திய முயற்சிக்கு அமெரிக்காவிலிருந்து நான் திரும்பிய பிறகு பதிலளிப்பேன். அக்டோபர் 7 அன்று நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு நான் ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறேன். நீங்கள் பயங்கரவாதத்திற்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்குகிறீர்கள். பாலஸ்தீனத்தை சுதந்திர நாடு என்று நீங்கள் கூறுவது நடக்காது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகப்பெரிய அழுத்தத்திற்கு மத்தியிலும், பல ஆண்டுகளாக அந்த பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்துள்ளேன். இதை நாங்கள் உறுதியுடனும், சிறந்த ராஜதந்திரத்துடனும் செய்துள்ளோம். மேலும், யூதேயா மற்றும் சமாரியாவில் யூதக் குடியிருப்புகளை இரட்டிப்பாக்கியுள்ளோம், இந்த வழியில் நாங்கள் தொடர்ந்து செல்வோம்" என்று கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "பாலஸ்தீன நாட்டின் அங்கீகாரத்தை இங்கிலாந்து மற்றும் சில நாடுகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்ததை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இந்த அறிவிப்பு அமைதியை உருவாக்காது, மாறாக மேலும் நிலையற்ற தன்மையை உள்ளாக்குகிறது. மட்டுமல்லாது எதிர்காலத்தில் அமைதியான தீர்வை அடைவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது" என்று கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications