பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்! 7.2 ரிக்டர் ஆக பதிவு

குஸ்தர் பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 14.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீடுகள் கடுமையாக குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். அவாரன் நகரில் இருந்து 96 கி.மீ. தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக குறைவு. போதிய மருத்துவ வசதிகள், சாலை வசதிகள் இல்லை. தொலைதூரத்தில் இருப்பதாலும், ராணுவம் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதாலும் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அவாரன் மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் 359 பேர் பலியாகி உள்ளனர். 765 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications