ராணி எலிசபெத்தைச் சுட்டுக் கொல்ல முயற்சித்த இளைஞர்.. 37 ஆண்டுகளுக்குப் பின் அம்பலமான ரகசியம்
நியூசிலாந்து சென்றிருந்த இங்கிலாந்து ராணியைக் கொல்ல நடந்த சதி தற்போது அம்பலமாகியுள்ளது.
லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தைக் கொல்ல நியூசிலாந்தில் நடந்த சதி, 37 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அம்பலமாகியுள்ளது.
இங்கிலாந்தின் ராணியாக 92 வயதான இரண்டாம் எலிசபெத் ஆட்சி புரிந்து வருகிறார். கடந்த 64 ஆண்டுகளாக ராணியாக உள்ள இவர், உலகின் அதிக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தவர் என்ற பெருமைக்குரியவர்.
அந்தவகையில், கடந்த 1981ம் ஆண்டு நியூசிலாந்து சென்றிருந்தார் எலிசபெத். அப்போது அவரைக் கொல்ல சதி நடந்ததாக நியூசிலாந்து நாட்டு உளவுத்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதாவது, நியூசிலாந்தின் டியூண்டின் நகரில் அவர் பயணம் செய்தபோது, கிறிஸ்டோபர் லூயிஸ் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது இளைஞர், ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து அவரைத் துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளார்.
ஆனால், இதில் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் இந்த கொலை முயற்சியை வெளியில் தெரியாமல் அந்நாட்டு போலீசார் மறைத்து விட்டனர்.
சில நாட்கள் கழித்து ஆயுத திருட்டு வழக்கில் லூயிஸ் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ராணியைக் கொல்ல மேற்கொண்ட சதி அம்பலமானது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அச்செய்தி வெளியில் கசிந்து விடாதபடி பார்த்துக் கொண்டனர். லூயிஸ் மீது ஆயுதத் திருட்டு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது.
காரணம் இது தங்களது நாட்டுக்கு அவமானம் எனக் கருதியதோடு, கொலைச் சதி வெளியில் தெரிந்தால் எதிர்காலத்தில் ராணி எலிசபெத் தங்களது நாட்டுக்கு வருவது தடைபடும் என அவர்கள் கருதியுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட லூயிஸ் கடந்த 1997ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டான்.
தற்போது இந்தத் தகவல்கள் நியூசிலாந்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனால் இங்கிலாந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.