நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து... 12 பேர் படுகாயம்!
நியூயார்க்கின் பிரான்க்ஸில் 12 அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் : பிரான்க்ஸில் உள்ள 12 அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் 200 தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நியூயார்க்கின் வேன் நெஸ்ட்டில் உள்ள பிரான்க்ஸ் விலங்குகள் பூங்கா மிகவும் பிரபலமானது. இந்த பூங்காவிற்கு அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்நாட்டு நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் பயங்கர தீ பிடித்து எரிந்துள்ளது.
பிரான்க்ஸ் கட்டிடம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குடியிருப்பு பகுதி 4 அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் சுமார் 12 குடியிருப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிகாலை தீ விபத்து
அதிகாலை நேரத்தில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து நியூயார்க் சிட்டியின் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீயை அணைக்க போராட்டம்
எனினும் அதிகாலை நேரம் என்பதோடு கரும்புகை அதிக அளவில் இருந்ததாலும் தீயை அணைப்பது சிரமமாக இருந்துள்ளது. சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர். முதல் தளத்தில் இருந்த மரச்சாமான் கடையில் இருந்து தீ பற்றி எரிந்து மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிகிறது.
முதல்கட்ட தகவல்
இந்த தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட 19 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கட்டிடத்தில் இருந்தவர்கள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டதாக என்ற தகவல் இல்லை, எனினும் சுமார் 12 பேர் வரை கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக சர்வதேச ஊடக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
|
அடுத்தடுத்த தீ விபத்துகள்
அண்மையில் நியூயார்க் நகரையே உலுக்கி போட்ட ஒரு தீ விபத்து சம்பவம் நடந்தது. 3 வயது குழந்தை ஒன்று ஸ்டவ் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்து 12 பேரின் உயிரை பலிவாங்கிய நிலையில் மீண்டும் ஒரு விபத்து நடந்திருப்பது அந்தப் பகுதியினரை அச்சமடைய வைத்துள்ளது.