இதுக்குத் தாங்க பிளைட்லயும் ‘கண்டக்டர்’ வேணுங்கறது...
வாஷிங்டன்: அமெரிக்காவில் 9 வயது சிறுவன் ஒருவன் டிக்கெட் இல்லாமல் தனியாக 2000 கி.மீ. தூரம் விமானப் பயணம் செய்தது மக்களிடையே தேசத்தின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்காங்கே தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி பயணிகளைக் கடத்தி அச்சுறுத்தல் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் எல்லாவித சோதனைகளில் இருந்தும் தப்பி கிட்டத்தட்ட 2000கிமீ தூரம் தனியாக பயணம் செய்துள்ளான் 9 வயது சிறுவன் ஒருவன்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட விமானப் பயணிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து கலக்கமடைந்துள்ளனர்.

டெல்டா விமானம்....
சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மின்னபோலிஸ் செயிண்ட்பால் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லாஸ்வேகாஸ் செல்ல ஆயத்தமானது டெல்டா விமானம் ஒன்று.

பொய்....
விமானத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனியாக ஏறியுள்ளான். காலியாக இருந்த சீட்டில் அமர்ந்த அச்சிறுவனை, விமானப் பணியாளர்கள் விசாரித்த போது, ‘தன் பெற்றோர் பின் சீட்டில் அமர்ந்திருப்பதாகக் கூறியுள்ளான்.

அதிர்ச்சி....
சிறுவனது பேச்சை முதலில் நம்பிய ஊழியர்கள், விமானம் லாஸ்வேகாஸ் நகரத்தை நெருங்கும் போது எதேச்சையாக பயணிகள் லிஸ்டில் அச்சிறுவனின் பெயர் இல்லாததைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

தீவிர விசாரணையில்....
அதனைத் தொடர்ந்து அச்சிறுவனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அச்சிறுவன் தனிமையில் விமானத்தில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர், அச்சிறுவன் மீண்டும் பத்திரமாக மின்னபோலிஸ் அனுப்பி வைக்கப் பட்டான்.

சோதனைகளில் சிக்கவில்லை....
விமான நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்ததில் சிறுவன் அனைத்து வித பாதுகாப்பு சோதனைகளையும் மீறி விமானத்தை நோக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததைக் கண்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கேள்விக்குறியான பாதுகாப்பு...
9 வயது சிறுவன் அனைத்து வித சோதனைகளையும் மீறி விமானத்தில் தனிமையில் சுமார் 2000 கிமீ பயணம் செய்த தகவல் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications