நாங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.. தாவுத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை.. பாகிஸ்தான் பல்டி!
இஸ்லாமாபாத்: தாவுத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திடீரென்று மறுப்பு தெரிவித்துள்ளது. தாவுத் கராச்சியில் இருப்பதாக நேற்று பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்று திடீரென பல்டி அடித்துள்ளது.
Recommended Video
1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிற்கு மாஸ்டர் மைண்டாக இருந்தவர்தான் தாவுத் இப்ராஹிம். சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பையில் நிழல் உலக ராஜ்ஜியம் நடத்தி வந்த இவர், தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் தாவுத் இப்ராஹிம் , ஷாகி உர் ரஹ்மான் உட்பட பல்வேறு தீவிரவாதிகள் மீது பொருளாதார, ஆயுத தடைகளை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையில் தாவுத் இப்ராஹிம் கராச்சியில் இருப்பதாக பாகிஸ்தான் குறிப்பிட்டு இருந்தது .

என்ன சொன்னது
ஐநா மூலம் அடையாளப்படுத்தப்பட்ட 88 தீவிரவாதிகள் மீது இந்த தடையை நேற்று பாகிஸ்தான் விதித்தது. இவர்களின் சொத்துக்களை முடக்குவது, வங்கி கணக்குகளை முடக்குவது., இவர்களுக்கு பயண தடை, பொருளாதார தடைகளை விதிப்பது உள்ளிட்ட உத்தரவுகளை பாகிஸ்தான் வெளியிட்டது. இந்த லிஸ்ட்டில் தாவுத் இப்ராஹிம் பெயரும் இடம்பெற்று இருந்தது .

கராச்சி விலாஸம்
இந்த உத்தரவில்தான், தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசிப்பதாக அந்த நாடு குறிப்பிட்டு இருந்தது. அதாவது தாவுத் இப்ராஹிமின் விலாசம் என்று குறிப்பிட்டு, கராச்சி விலாசம் ஒன்றை குறிப்பிட்டு இருந்தது. கராச்சியில் இருக்கும் வெள்ளை மாளிகை, பாக் சவுதி மசூதி அருகே, கிளாப்டன் ரோட், கராச்சி என்று இந்த விலாசத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வீடு எங்கு
அதேபோல் இவருக்கு கராச்சி ஹவுசிங் அத்தாரிட்டியில் வீடு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் பாகிஸ்தான் தாவுத் இப்ராஹிம் இடத்தை ஒப்புகொண்டது என்று இந்தியா குறிப்பிட்டது. உலக அளவில் இந்த செய்திகள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாவுத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திடீரென்று மறுப்பு தெரிவித்துள்ளது. தாவுத் கராச்சியில் இருப்பதாக நேற்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்ட நிலையில் இன்று திடீரென பல்டி அடித்துள்ளது.

நாங்கள் கூறவில்லை
இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், பாகிஸ்தானில் தாவுத் இப்ராஹிம் இருப்பதாக நாங்கள் கூறவில்லை. இந்திய ஊடகங்கள் இதை தவறாக புரிந்து கொண்டு, தவறான முறையில் செய்தி வெளியிட்டுள்ளது. ஐநாவின் மூலம் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் மீதான பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்து மட்டுமே நாங்கள் இந்த அறிவிப்பில் வெளியிட்டு இருக்கிறோம்.

என்ன அறிவிப்பு
ஐநாவின் விதிகளுக்கும் சர்வதேச விதிகளுக்கும் கட்டுப்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். பாகிஸ்தான் இவர்கள் மீது விதித்து இருக்கும் தடைகள் குறித்தே இதில் விளக்கப்பட்டுள்ளது. இது எப்போதும் வெளியிடப்படும் அறிவிப்புதான். கடந்த வருடமும் இதே போல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இது புதிய அறிவிப்பு இல்லை. இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications