அணுகுண்டைவிட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை சோதித்தது வடகொரியா! உலக நாடுகள் அதிர்ச்சி
பியொங்யாங்: ஹைட்ரஜன் அணுகுண்டை வெற்றிகரமாக சோதித்து பார்த்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. இந்த சோதனை காரணமாகத்தான், நிலநடுக்கம் போன்ற அதிர்வை வட கொரிய மக்கள் உணர்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய நாடான வடகொரியா 2006ம் ஆண்டில் தனது முதாலவது அணுகுண்டு சோதனையை நடத்தி உலகை திரும்பி பார்க்க செய்தது. இதன்பிறகு, 2013 பிப்ரவரியில் 3வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்காக உலக நாடுகள் கண்டனத்தை எதிர்கொண்டது.
இந்நிலையில், அணுகுண்டைவிட சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை பூமிக்கு அடியில் சோதித்து பார்த்துள்ளது வடகொரியா. இதன் காரணமாக ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவுக்கு அங்கு நில அதிர்வு ஏற்பட்டது. அமெரிக்க நிலவியல் அமைப்பு நில நடுக்கம் ஏற்பட்டதை கண்டறிந்து அறிவித்த நிலையில், வடகொரிய ஆய்வு மையமோ, அது ஒரு செயற்கை நடுக்கம் என கூறியிருந்தது.
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், வடகொரிய தேசிய தொலைக்காட்சி சேனல், தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் குண்டை சோதித்து பார்த்ததாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு வடகொரியா சோதித்த அணுகுண்டுகளைவிட ஹைட்ரஜன் குண்டு சக்தி வாய்ந்தது. அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தேவைப்படுவதாக வடகொரியா ஏற்கனவே கூறிவந்தது நினைவிருக்கலாம்.
இதனிடையே, தங்கள் நாட்டுக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார். சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளும், இந்த சோதனையை கண்டிக்கும் என தெரிகிறது. உலக நாடுகள் மற்றும் ஐ.நாவின் கோபத்திற்கு வடகொரியா ஆளாக நேரிடலாம்.