வானில் தோன்றிய மர்ம பொருட்கள்.. கொரோனாவுக்கு காரணம் "ஏலியன்?" வட கொரியா கொடுத்த வினோத விளக்கம்
சியோல்: வடகொரியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து இருந்த நிலையில், இது குறித்து அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. ஓமிக்ரான் உள்ளிட்ட காரணங்களால் உலகெங்கும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
அதிலும் கொரோனா பாதிப்பு இரண்டு ஆண்டுகளாக ஏற்படாமல் இருந்த வடகொரியாவிலும் கூட ஓமிக்ரான் காரணமாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா
ஓமிக்ரான் மற்ற கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவும் என்பதால் வடகொரியாவில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் இருந்தது. வெறும் ஒரு சில வாரங்களிலேயே அங்குப் பாதிப்பு உச்சம் தொட்டது. ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் மட்டும் லட்சக் கணக்கானோருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து வட கொரியாவில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இப்போது அங்கு வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

வானில் இருந்த மர்மப் பொருட்கள்
இது தொடர்பாக அந்நாட்டு அரசு வினோத விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது வானில் இருந்த மர்மப் பொருட்கள் தங்கள் நாட்டில் விழுந்ததாகவும் அதைத் தொட்டதாலேயே வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் வடகொரியா கூறி உள்ளது. தென் கொரியாவின் எல்லைக்கு அருகில் இருந்த சில ஏலியன் விஷயங்களைத் தொட்டதாலேயே தங்கள் நாட்டில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக வட கொரியா கூறியது. அதாவது தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படத் தென் கொரியாவே காரணம் எனச் சாடி உள்ளது.

வடகொரியா
மேலும், அந்நிய பொருட்கள் ஏதேனும் தங்கள் பகுதிக்குள் வந்து விழுந்தால் விழிப்புடன் கையாள வேண்டும் என்றும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கும்காங்கின் கிழக்கு மாகாணத்தில் சில அந்நிய பொருட்கள் எங்கோ இருந்து வந்ததாகவும் அதைத் தொட்டதாலேயே 18 வயது ராணுவ வீரர் ஒருவருக்கும் ஐந்து வயதான சிறுவர் ஒருவருக்கும் கொரேனா பாதிப்பு ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒரே மாகாணம்
கடந்த ஏப்ரல் மாதம் காங்வோன் மாகாணத்தில் தான் அதிக பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. அந்த இடத்தில் தான் அடையாளம் தெரியாத பொருட்களும் அதிகம் காணப்பட்டது. மேலும், வடகொரிய மக்களுக்கு காய்ச்சல் இருந்தது உண்மை தான் என்றாலும் அது கொரோனாவால் ஏற்பட்டதா இல்லை வேறு காரணங்களால் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள்
வடகொரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரே நேரத்தில் பலருக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த மே மாதம் அவசர நிலை அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அங்கு 3 வாரம் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது. இப்போது வைரஸ் பாதிப்பிற்கு வானத்தில் திடீரென தோன்றிய மர்மப் பொருட்களே காரணம் என வடகொரியா சாடி உள்ளது.












Click it and Unblock the Notifications