என்ன ரங்கா ஜோக் காட்டுறியா? அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த வடகொரியா! இன்றும் ஏவுகணை சோதனை தொடர்கிறது
பியோங்யாங்: தென்கொரியாவுடன் அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சியை தொடங்கிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் ஏழாம் பொருத்தம் இருக்கும் நிலையில் அமெரிக்கா இதில் மூக்கை நுழைத்திருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனையை தொடர்ந்து கண்காணித்து வரும் ஜப்பான், தனது நாட்டு மக்களை எச்சரித்து வருகிறது.
தீவிரமடையும் ஏவுகணை தாக்குதல்... இருளில் மூழ்கிய உக்ரைன்.. வேகம் எடுத்த ரஷ்யாவின் அட்டாக்!
மீண்டும் சோதனை
மேற்குறிப்பிட்டதைப்போல வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் அமெரிக்கா தென்கொரியாவுடன் சேர்ந்து ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த பயிற்சியின் காரணமாக தனது நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக கொரிய தீபகற்பம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வடகொரியா 23 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து பார்த்திருக்கிறது.
அச்சம்
இந்நிலையில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியுள்ளது. கடந்த 1 மணி நேரத்தில் 2 கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ஏவுகணைகள் தற்போது வரை ஏவப்பட்டுள்ளதாக ஜப்பான் கூறியுள்ளது. மேலும், இந்த சோதனை காரணமாக ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல ஜப்பானில் சில குறிப்பிட்ட பகுதிகளில் புல்லட் ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் வடகொரியா ஏவும் ஏவுகணை ஜப்பானை கடந்துதான் பிலிப்பைன்ஸ் கடலிலும், வட பசிபிக் பெருங்கடலிலும் சென்று விழும். எனவே தங்கள் நாட்டை கடந்து ஏவுகணை செல்வதால் ஜப்பான் அச்சமடைந்துள்ளது.
ஐ.நா தீர்மானங்கள்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அந்நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களான மியாகி, யமகட்டா மற்றும் நிகாடா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறு நேற்று அறிவுறுத்தியிருந்தார். ஆனால் எந்த ஏவுகணையும் ஜப்பான் மீது விழாததால் பிரதமரின் அச்சம் நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. இது குறித்து வடகொரியாவுக்கு கடும் கண்டனத்தை பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார். "வடகொரியாவின் ஏவுகணை சோதனை பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இதனை மன்னிக்க முடியாது" என்று கிஷிடா கூறியிருந்தார். இந்நிலையில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியுள்ளதாக அமெரிக்கா இன்று குற்றம்சாட்டியுள்ளது.
விமான பயிற்சி
ஆனால் அமெரிக்கா தென்கொரியாவுடன் சேர்ந்து மேற்கொண்டுள்ள ராணுவ பயிற்சிதான் ஆத்திரமூட்டுவதாக உள்ளது என வடகொரியா பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளது. தென்கொரியாவுடன் விமான பயிற்சியை மேற்கொண்டுள்ள அமெரிக்கா எஃப்-35 ரக 240 போர் விமானங்கள் 24 மணி நேரமும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகதான் வடகொரியா ICBM ரக ஏவுகணை சோதனை செய்து வருகிறது. இந்த வகை ஏவுகணை 2000 கி.மீ உயரத்தில் பறந்து 750 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். 2000 கிமீ உயரம் வரை இந்த ஏவுகணை பயணிப்பதால் இது ரேடாரில் சிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.