மறைந்த சவுதி மன்னருக்கு அஞ்சலி... ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து புதிய மன்னருடன் ஒபாமா ஆலோசனை
ரியாத்: மூன்று நாள் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து, சவுதி சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஒபாமா, மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தனது மூன்று நாள் பயணம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து நேற்று சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார். சவுதி சென்று இறங்கிய அமெரிக்க அதிபர் ஒபாமாவை, மன்னர் சல்மான் நாட்டின் மூத்த எண்ணெய் வள அமைச்சர் அலி அல்-நயிமி மற்றும் சவுதி இளவரசர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, மறைந்த சவுதி மன்னருக்கு அதிபர் ஒபாமா அஞ்சலி செலுத்தினர். மன்னரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், புதிய மன்னர் சல்மானைச் சந்தித்தார் ஒபாமா.
இப்பயணம் அமெரிக்க-சவுதி எண்ணெய் வள பிராந்திய பாதுகாப்பு குறித்து முக்கியத்துவம் பெறும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சவுதியின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள சல்மானிடம், ஐ.எஸ். தீவிரவாதத்தை முறியடிப்பது, ஏமனின் கொந்தளிப்பான சூழ்நிலை, ஈரானின் அணுசக்தி கொள்கை ஆகியவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா விரும்புகிறார்.
மன்னர் அப்துல்லாவின் கீழ் ஏற்கெனவே தொடர்ந்துவந்த சவுதியின் கொள்கைகள் மேலும் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் ஒபாமா மறைந்த மன்னரிடம் தொடர்ந்ததைப் போலவே புதிய மன்னரிடமும் நெருங்கிய உறவை தொடர விரும்புகிறார் என்றார்.