மாற்றுப்பாலினத்தவர்களை.. மனநோயாளிகள் என வகைப்படுத்திய பெரு! அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பெரும் சர்ச்சை
லிமா: பெரு நாட்டில் மாற்று பாலினத்தவரை 'மனநோயாளிகள்' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
உலகம் முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். இப்படி இருக்கையில், அரசே அதிகாரப்பூர்வமாக மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரிப்பதற்கு பதில், அவர்களை மனநோயாளிகள் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

பெரு நாட்டின் மாற்று பாலினத்தவர்களை அங்கீகரிப்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இப்படி இருக்கையில், சமீபத்தில் ஒரு அரசாணையில் அந்நாட்டு அதிபர் தினா பலுவரேட் கையொப்பமிட்டுள்ளார். அதில், மாற்றுப்பாலினத்தவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கான மருத்துவ உதவியை இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச நோய்களின் பட்டியலிலிருந்து மாற்றுப்பாலின சிக்கல்களை உலக சுகாதார அமைப்பு நீக்கி இந்த ஆண்டுடன் 34 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து தற்போது இந்த முடிவை பெரு அரசு அறிவித்திருக்கிறது. இந்த உத்தரவு LGBTQ மக்களிடம் அதிருப்தியை உருவாக்கும் என்றும், ஆனால் அவர்கள் மாற்று சிகிச்சை எதற்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அரசு கூறியுள்ளது.
அரசு தரப்பில் என்னதான் சமாதானம் சொன்னாலும், பெரு நாட்டில் பல்வேறு அமைப்பினர்கள் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அரசின் இந்த முடிவை எதிர்த்து போராட்டங்களை நடத்த இருப்பதாகவும், அரசின் முடிவுகள் திரும்பப் பெறப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா போன்ற கலாச்சாரம், பண்பாடு மிக்க நாடுகளில் கூட இன்னும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்கப்படுவதில்லை. அவர்கள் பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து அரசாங்கம் திட்டமிடலை வைத்திருந்தாலும், அதை முழுமையாக அமல்படுத்த முடிவதில்லை. அல்லது, அமல்படுத்துவதில் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் தேவைப்படுகிறது.
ஏறத்தாழ ஆசிய கண்டனம் முழுவதும், சீனா தவிர வளர்ந்து வரும் நாடுகளில் இதே நிலைதான் இருக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இவர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கப்படும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது தென் அமெரிக்க நாடுகளில் மூன்றாவது பெரிய நாடான பெருவில் மாற்று பாலினத்தவர்கள் மனநோயாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள மாற்று பாலினத்தவர்கள், அவர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications