2018க்கு பிறகு.. மீண்டும் ஓமன் செல்லும் பிரதமர் மோடி! ரொம்ப முக்கியம்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
மஸ்கட்: கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டுக்கு சென்றிருந்தார். இதனையடுத்து, தற்போது மீண்டும் ஓமன் நாட்டுக்கு செல்கிறார். இது மிக முக்கியமான நிகழ்வு என்றும், இந்நிகழ்வை நாங்கள் ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் எனவும் இந்தியாவிற்கான ஓமன் தூதர் இசா சலே அப்துல்லா சலே அல்ஷிபானி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நரேந்திர மோடியின் வருகை இருநாட்டு உறவுகளுக்கு முக்கியமானது. ஓமனும் இந்தியாவும் கொண்டுள்ள ஆழமான உறவை வணிக உலகிற்கு இது உணர்த்துகிறது. ஓமனை ஒரு முதலீட்டு இலக்காகக் கருதும் வணிக நிறுவனங்களின் நம்பிக்கையையும் இது அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, இந்த மாத இறுதியில் ஓமனுக்கு செல்ல இருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக ஓமன் சென்றிருந்தபோது, போதைய சுல்தான் காபூஸ் பின் சயீதை சந்தித்து, இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதித்திருந்தார்.
ஹூதி கிளர்ச்சியாளர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் ஒருவர், சமீபத்தில் குடும்பத்துடன் இணைந்தார். இது மகிழ்ச்சியளிக்கிறது என்று தூதர் அல்ஷிபானி தெரிவித்தார். கேரளாவின் காயங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ரவீந்திரன் என்பவர், MV எடர்னிட்டி சி எனும் கப்பலில் பணியாற்றி வந்திருந்தார். இந்த கப்பல், கடந்த ஜூலை மாதம் செங்கடலில் தாக்குதலுக்குள்ளானது. கப்பலை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்கியிருந்தனர். கப்பல் மூழ்கியதையடுத்து அவர் கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் கோரிக்கையை அடுத்து ரவீந்திரன், விடுவிக்கப்பட்டிருந்தார். "அந்த நபர் குடும்பத்துடன் இணைந்ததைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். ஓமன் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஓமன், அந்த நம்பிக்கையையும், நட்பையும் பயன்படுத்தி தேவைப்படும் இடங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது" என இந்த சம்பவம் குறித்து ஓமன் தூதர் நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
அதேபோல சமீபத்தில் நடந்த இந்தியா-ஓமன் கிரிக்கெட் போட்டி, ஓமனில் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறித்து அல்ஷிபானியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "ஓமனில் அனைத்து வகையான விளையாட்டுகளையும் மக்கள் விரும்புகிறார்கள். கிரிக்கெட்டுக்கு ஓமனில் ரசிகர்கள் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. இது வளர்ந்து வரும் விளையாட்டு. முன்பு கால்பந்துதான் ஓமனில் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டாக இருந்தது. இப்போது அனைத்து விளையாட்டுகளும் ஓமனில் வளர்ந்து வருவதையும், மக்கள் அனைத்து விதமான விளையாட்டுகளிலும் பங்கேற்பதையும் காண்கிறோம். இது மக்களுக்கிடையேயான உறவுகளின் ஆழத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்திய சமூகத்தில் கிரிக்கெட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஓமனில் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications