விமான விபத்தில் பலியானார் நேதாஜி... நேரில் பார்த்த சாட்சியத்துடன் பிரிட்டிஷ் இணையதளம் செய்தி!
லண்டன்: தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. அவர் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக ஒரு தரப்பினரும், இல்லை அதற்குப் பின்னரும் அவர் உயிர் வாழ்ந்தார் என ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேதாஜி விமான விபத்தை சந்தித்த நாளில் என்ன நடந்தது என்ற ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
சந்தேகம்...
கடந்த 70 ஆண்டுகளாக விமான விபத்தில் நேதாஜி இறந்தாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்துடன் தொடர்புடைய உறுதியான தவிர்க்க முடியாத 4 தனித்தனி அறிக்கைகள் உள்ளன.
சம்பவத்தன்று...
1945 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காலை ஜப்பான் நாட்டு விமான படையின் வெடிகுண்டு வீசுகிற வீரர் வியட்நாமின் டோரனேவில் இருந்து விமானத்தை எடுத்துள்ளார். அந்த விமானத்தில் நேதாஜியுடன் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர்.
திட்டம்...
அதில் ஜப்பான் ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் சுனமாசா ஷிடை உடனிருந்தார். ஹிட்டோ-தைபை-டைரென்-டோக்கியோ பாதை வழியாக அந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது" என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து...
கடந்த சில தினங்களுக்கு முன், நேதாஜியின் இந்த விமானப் பயணத்திற்கு முந்தைய நாள் நடந்த நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்தகட்டம்...
இதன் அடுத்தகட்டமாக வருகிற 16ம் தேதி நேதாஜியின் விமான விபத்தைத் தொடர்ந்து, அன்றிரவு நடந்த சம்பவங்களை இந்த இணையதளம் வெளியிட உள்ளது.
நேதாஜியின் உறவினர்...
தொடர்ந்து பரபரப்புத் தகவல்களை வெளியிட்டு வரும், இந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.