செவ்வாய்க்கான “ஒன்வே” பயணத்திற்கு 3 இந்தியர்கள் விண்ணப்பம் – இறுதி பட்டியலில் இடம் பிடிப்பார்களா?
லண்டன்: உலகில் முதன்முதலாக செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்காக விண்ணப்பித்தவர்கள் பட்டியலில் 3 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர்.
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மங்கள்யானும் இந்த தேடலில்தான் தீவிரமாக இறங்கியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, அங்கு மனிதர்களை குடியேற்றும் திட்டத்தை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி சுமார் 40 பேரை கொண்ட ஒரு காலனியை அங்கு நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது.

Image Courtesy: www.mars-one.com
நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான "மார்ஸ் ஒன்" அமைப்பு, இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது.
இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம்.
இது ஒரு வழி பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்தால் அங்கு இருந்து திரும்பி வர முடியாது.
இந்த வினோத பயணத்திற்காக உலகம் முழுவதும் இருந்து விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து 3 சுற்று சோதனைகள் நடத்தி, 50 ஆண்கள், 50 பெண்கள் கொண்ட 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்காவில் இருந்து 39 பேர், ஐரோப்பியர் 31, ஆசியாவில் இருந்து 16, ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியாவில் இருந்து தலா 7 பேர் அடங்குவர்.
இந்த பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங், துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங், கேரளாவை சேர்ந்த இளம்பெண் சாரதா பிரசாத் ஆகிய 3 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக 2 ஆவது சுற்றின் முடிவில் 44 இந்தியர்கள் உள்பட 660 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி நார்பர்ட் கிராப்ட் நடத்திய தனிப்பட்ட ஆன்லைன் நேர்காணலில் 100 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
இது குறித்து நார்பர்ட் கூறுகையில், "எவ்வளவு வலிமையான பங்கேற்பாளர்கள் இந்த நேர்காணலில் பங்கு பெற்றிருக்கிறார்கள்? உண்மையிலேயே நாங்கள் அசந்துபோனோம். இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்தது" என்று கூறினார்.
தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இன்னும் சில கடினமான சோதனைகள் நடத்தப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். அந்த பட்டியலில் இடம் பிடிப்போருக்கு 7 ஆண்டுகள் விண்வெளி பயிற்சி அளிக்கப்படும்.
பின்னர் 2024 ஆம் ஆண்டு முதல் 4 பேர் வீதம் அவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். அந்த இறுதிப்பட்டியலில் இந்தியர்கள் இடம் பெறுவார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications