இஸ்ரேலை அழிக்கும் ஈரான்.. ‛ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ அறிவிப்பு.. மூளும் பெரிய போர்.. ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேல் நகரங்கள் குறிவைத்து அழிக்கப்படும். இஸ்ரேல் மொத்தமாக சிதைக்கப்படும். இதற்காக ‛ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3' திட்டத்தை வகுத்துள்ளோம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் - ஈரான் இடையே பெரிய போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ‛ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3' என்றால் என்ன? அதன் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகள் இடையேயான மோதல்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அதன்பிறகு பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இதில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Israel iran operation true promise

மறுபுறம் பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காசாவில் இயங்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தற்போது போர் என்பது காசாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பிற பகுதிகளில் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பிரச்சனையிலும் அமெரிக்கா தலையிட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் - காசா இடையேயான போரும் முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

இப்படி உக்ரைன் - ரஷ்யா மற்றும் காசா - இஸ்ரேல் இடையேயான போர் முடிவுரையை நோக்கி செல்லும் நிலையில் தான் தற்போது புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. . எல்லாம் நன்றாக தானே போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போது தான் மிகப்பெரிய இடியை இறக்கி இருக்கிறது ஈரான். இதற்கு இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் தான் காரணம். இஸ்ரேலுக்கு எதிராக ‛ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3' என்ற பெயரில் தாக்குதல் நடத்தி மொத்த இஸ்ரேலையும் தரை மட்டம் ஆக்குவோம் என்று தடாலடியாக அறிவித்துள்ளது ஈரான். இந்த அறிவிப்பை ஈரானின் ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானின் ராணுவத்தின் ஒருபகுதியாக ஐஆர்ஜிசி எனும் இஸ்லாமிக் புரட்சிகர படை பிரிவு (The Islamic Revolutionary Guard Corps) செயல்பட்டு வருகிறது. இதன் தளபதி இப்ராஹிம் ஜபாரி தான் இஸ்ரேலுக்கு எதிரான ‛ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3' திட்டத்தை அறிவித்துள்ளார். இதுபற்றி இப்ராஹிம் ஜபாரி கூறுகையில், ‛‛சரியான நேரத்தில் இஸ்ரேலை தாக்க உள்ளோம். இதற்காக ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் - 3 திட்டத்தை கையில் வைத்துள்ளோம். இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை அழிக்க இந்த திட்டம் கைக்கொடுக்கும்'' எனக்கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

இதற்கு இஸ்ரேலும் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. இதுபற்றி இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சார் கூறுகையில், ‛‛யூதர்கள் வரலாற்றில் இருந்து பாடம் கற்கும் தன்மை கொண்டவர்கள். நம்மை அழிப்பது தான் குறிக்கோள் என்று எதிரி கூறினால் அதை நம்ப வேண்டும். இதனை வரலாற்றில் இருந்து யூத மக்களான நாங்கள் கற்று கொண்டுள்ளனர். எனவே ஈரானை திருப்பி அடிக்க நாங்களும் தயார் தான்'' என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் என்பது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மேலும் இருநாடுகள் இடையே போர் வெடித்தால் அது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும். இஸ்ரேல்- ஹமாஸ், இஸ்ரேல்-ஹெஸ்புலா மோதலை விட இது மிகவும் உக்கிரமாக இருக்கும். ஏனென்றால் ஹமாஸ், ஹெஸ்புல்லாக்கள் அனைத்தும் ஈரானின் பினாமி அமைப்புகள் தான். ஈரானின் சப்போர்ட்டில் தான் செயல்பட்டன. இதனால் ஈரான் மீது ஆக்ரோஷமாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தும். அதேபோல் தனது ஆதரவு அமைப்புகளை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் மீது ஈரானும் வெறித்தனமாக தாக்குதலை முன்னெடுக்கும். இப்படியான சூழலில் தான் பிற நாடுகள் போருக்குள் நுழையும். குறிப்பாக இஸ்ரேலும், ஈரானும் மோதினால் அமெரிக்கா நிச்சயம் உள்ளே வரும். ஏனென்றால் இஸ்ரேலும், அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள்.

இதற்கு சாட்சியாக தான் டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபரானதும் அவர் சந்தித்த முதல் தலைவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தான். கடந்த 4ம் தேதி இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். அப்போது இருதலைவர்களும் ஈரான், ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹவுதி அமைப்பின் செயல்பாடு பற்றி விரிவாக விவாதித்தனர். மறுபுறம் ஈரானும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவு என்பது இல்லை. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கும். இதனை நம்மால் 100 சதவீதம் உறுதியாக சொல்ல முடியும்.

ஏனென்றால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பஞ்சாயத்து மட்டுமின்றி, தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் ஈரான் என்றாலே பிடிக்காத நிலை உள்ளது. இப்போது மட்டுமில்லை டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபராக இருந்தேபோதே அவருக்கு ஈரானுடன் நல்ல உறவு என்பது இல்லை. டொனால்ட் டிரம்ப் முதல் முறை அமெரிக்காவின் அதிபராக இருந்த போது, ஈரான் படை தளபதி காசிம் சுலைமானியை போட்டுத்தள்ளினார். காசிம் சுலைமானி யார் என்றால் ஈரான் உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக திகழ்ந்தார். ஈரான் புரட்சிகர காவல் படையின் வெளிநாட்டு நடவடிக்கை பிரிவான குட்ஸ் படையின் தளபதியாக காசிம் சுலைமானி இருந்தார். ஈரானின் ஆதரவில் வெளிநாடுகளில் செயல்படும் ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹவுதி, இஸ்லாமிய ஜிகாதிகளுக்கு ஆயுத உதவி, நிதி உதவி, இதர உதவிகள், உளவு தகவல்கள், அசைன்மென்ட்கள் கொடுக்கும் முக்கிய பொறுப்பை கவனித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு 3 முறை டொனால்ட் டிரம்பை கொல்ல சதி நடந்தது. இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நிச்சயம் டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளையும் மேற்கொள்வார். அதேபோல் ஈரானுக்கு ஆதரவாக பிற இஸ்லாமிய நாடுகள் களமிறங்கலாம்.

அதுமட்டுமின்றி ஈரான் ஆதரவில் பிற நாடுகளில் இயங்கும் அமைப்பினர் இந்த போருக்குள் என்ட்ரி கொடுக்கலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் காசாவில் செயல்படும் ஹமாஸ், லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா, ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்புகள் இந்த போரில் நேரடியாக தலையிடும். இதுதவிர அமெரிக்காவை விட ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் நல்ல உறவு உள்ளது. இதனால் ரஷ்யாவும் மறைமுகமாக ஈரான் பக்கம் சாயலாம். இதனால் போர் வந்தால் அது பெரிய அளவில் இருக்கும் என்ற அச்சம் உள்ளது.

மேலும் இஸ்ரேல் - ஈரான் இடையே இப்படி மோதல் நடப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இருநாடுகள் மாற்றி மாற்றி தாக்குதலை நடத்தி உள்ளன. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி போரை தொடங்கியது. காசாவில் இயங்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி மக்களை கொன்றனர். மேலும் பணையக்கைதிகளாக மக்கள் பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாகவும், ஹமாஸ்
அமைப்பினரை ஒழித்து கட்ட வேண்டும் என்பதற்காகவும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது.

ஹமாஸ் என்பது ஈரான் ஆதரவு அமைப்பாகும். இதனால் ஈரான் போர் நடவடிக்கையை கண்டித்தது. ஆனால் இஸ்ரேல் கேட்கவில்லை. இதனால் கோபமான ஈரான், லெபனான் நாட்டில் இயங்கும் தனது ஆதரவு அமைப்பான ஹெஸ்புல்லா அமைப்பினரை வைத்து இஸ்ரேலை தாக்கியது. ஆனால் இஸ்ரேல் அசரவில்லை. காசா மீதான போருக்கு நடுவே ஹெஸ்புல்லாக்களையும் சமாளித்தது. பேஜர் தாக்குதல், வாக்கி டாக்கி தாக்குதல் மூலம் ஹெஸ்புல்லா அமைப்பினரை இஸ்ரேல் அலறவிட்டது. அதுமட்டுமின்றி ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குண்டு வீசி கொன்றது. ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் கொன்றது. ஹமாஸ் படையின் யாஹ்யா சின்வாரை காசாவில் வைத்து இஸ்ரேல் தீர்த்து கட்டியது. இதனால் கோபமான ஈரான் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை ஈரான் நடத்தியது. ஒரே நேரத்தில் சக்திவாய்ந்த 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது.

இதற்கு இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுக்கவில்லை. 25 நாட்கள் காத்திருந்த இஸ்ரேல் அக்டோபர் 26ம் தேதி போர் விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது. 100க்கும் அதிகமான போர் விமானங்கள் ஈரான் வான்எல்லைக்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதல் நடத்தின. என்ன நடக்கிறது? என்பதை ஈரான் அறிவதற்குள் தாக்குதலை கச்சிதமாக முடித்துவிட்டு அனைத்து விமானங்களும் ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு திரும்பிவிட்டன. இதில் 4 ஈரான் வீரர்கள் இறந்தனர். பல கோடி மதிப்பிலான ராணுவ கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. இஸ்ரேலின் இந்த தாக்குதல் என்பது ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை உடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டமிட்டு அதில் இஸ்ரேல் வெற்றியும் பெற்றது.

இப்படியான சூழலில் தான் தற்போது ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக ‛ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3' திட்டத்தின் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியாக தற்போது ஈரான் தனது படைபலம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. சுரங்கம் அமைத்து ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் வீடியோ, கடல் வழியாக விரைவாக சென்று தாக்கி அழிக்கும் ‛ஸ்பீட் போட்' உள்ளிட்டவற்றை ஈரான் வீடியோ வெளியிட்டு வருகிறது. இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் ஈரான் செய்து வரும் நிலையில் ‛ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3' திட்டத்தை கையில் எடுத்து இருப்பது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளதோடு, இது மிகப்பெரிய போரை உருவாக்குகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+