அதிகாலை 2 மணிக்கு வந்த அலர்ட்.. எல்லையில் இந்திய விமானங்களை தடுத்த பாக். விமானங்கள்? வெளியான தகவல்
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானில் நுழைய முயன்ற இந்திய விமானங்களை நுழைய விடாமல் அந்நாட்டு விமானப்படை விமானங்கள் தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்துப் பார்க்கலாம்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற பகுதியில் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதலை நடத்தினர். அங்கு இயற்கை அழகை ரசித்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர். இதில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முழுச் சுதந்திரம்
இதனால் அந்நாட்டின் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார்.
இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தான் அரசு அதிகாலை 2 மணிக்கு எச்சரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தொடர்ச்சியாக இது தொடர்பாகப் பல்வேறு செய்திகளை வெளியிட்டன.
இந்திய விமானங்கள்
குறிப்பாக பாகிஸ்தானில் நுழைய முயன்ற நான்கு இந்திய ரஃபேல் போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தியதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், இதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் வெளியிடவில்லை. அதேபோல பாகிஸ்தான் ராணுவம் தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இன்னும் சில செய்தி ஊடகங்களில் பீம்பர் மற்றும் கோட்லி செக்டார்களில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு மேலே பறந்து கொண்டிருந்த ஆளில்லா இந்திய டிரோன்கள் இரண்டை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகச் செய்தி வெளியிட்டுள்ளன.. பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்குத் தீர்மானமான பதிலடி கொடுக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியிருந்த நிலையில், இதுபோன்ற செய்திகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
பதறும் பாகிஸ்தான்
இந்தியா எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தலாம் என்று அந்நாட்டின் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் கூறியிருந்த நிலையில், அதன் பிறகே இதுபோன்ற செய்திகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்தியாவுக்குச் சொந்தமான ரஃபேல்கள் மற்றும் Su-30MKIகள் விமானங்களை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
முன்னதாக இது தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் கூறுகையில், "பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்வதேச விசாரணை அமைப்புகள் இது தொடர்பான விசாரணையை நடத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். ஆனால், இந்தியா அதை ஏற்க மறுக்கிறது. இதில் இருந்தே அவர்களின் திட்டத்தை யூகிக்க முடிகிறது" என்று கூறியிருந்தார்.
பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியிருக்கும் என்று பலரும் சந்தேகிக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையும் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்ததையே காட்டுகிறது. ஆனாலும், பாகிஸ்தான் அரசை இதை ஏற்காமல் மறுத்தே வருகிறது. முன்னதாக பஹல்காம் விவகாரம் தொடர்பாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டிருந்த அறிக்கையில், "அணுசக்தி மோதலை நோக்கித் தள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். அமைதி என்பது பலவீனம் இல்லை" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications