திடீரென ஆப்கானிஸ்தான் பக்கம் திரும்பிய பாகிஸ்தான்! சரமாரி தாக்குதல்.. இந்தியாவை பழிவாங்கும் திட்டம்?
காபூல்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மெல்லச் சீராகி வருகிறது. இந்தச் சூழலில் திடீரென ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த பல காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நிலைமை மோசமானது. கடந்த மே மாதம் இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போனது. இப்போது தாக்குதல் இல்லை என்றாலும் இரு தரப்பிற்கும் இடையே பதற்றம் தொடர்ந்தே வருகிறது.

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்
இந்தச் சூழலில் தான் பாகிஸ்தான் தனது இன்னொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ்ரீக்-இ-தாலிபான் முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஏற்கனவே ஆப்கான்- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்த திடீர் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
தெஹ்ரீக்-இ-தாலிபான் தலைவர் நூர் வாலி மெஹ்சூத்தை குறிவைத்து ஷாஜித் அப்துல் ஹக் சதுக்கத்திற்கு அருகே இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2018-ல் மெஹ்சூத் இந்தக் குழுவின் தலைமையை ஏற்றார். மெஹ்சூத்தின் பெயரை பாகிஸ்தான் குறிப்பிடவில்லை என்றாலும், பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மட்டும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
மறுப்பு
நூர் வாலி கொல்லப்பட்டதாகப் பல்வேறு பாகிஸ்தான் ஊடகங்களும் செய்திகளை வெளியிட ஆரம்பித்தன. இந்தச் சூழலில் நூர் வாலி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனது மரணம் குறித்து வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் அமெரிக்கா இடையே உறவு சீராகி வரும் நிலையில், அதைத் துரோகமாக நூர் வாலி கருதினார். இதன் காரணமாகவே பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி, அவர் ஒரு பெரிய தலைவலியாகவே இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் குறிவைத்து தெஹ்ரீக்-இ-தாலிபான் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பாகிஸ்தான்
சமீபத்தில் தான் ஆப்கானை ஆளும் தாலிபான்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். பாகிஸ்தானைக் குறிவைக்கத் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தி வருவதாகவும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த எச்சரிக்கை விடுத்த 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் இந்தத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
பின்னணி
அதிலும் பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்திய நேரம் தான் கவனம் பேசுபொருள் ஆகியுள்ளது. அதாவது தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி முதன்முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சமயத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆட்சியை இன்னும் இந்தியா அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்காகவே முட்டாகி இந்தியா வந்திருந்தார். இந்தியா உடனான உறவை ஆப்கானிஸ்தான் வலுப்படுத்தி வருவதைப் பார்த்து அதிருப்தி அடைந்தே பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், ஆப்கான் அமைச்சர் முட்டாகியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் பாகிஸ்தான் உற்றுக் கவனித்தே வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications