பாகிஸ்தானில் 9 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் !
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை அந்நாட்டு ராணுவ தளபதி ரகீல் ஷெரீப் உறுதிபடுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர் நோக்கி சுமார் 8 ஆயிரம் கைதிகள் சிறைகளில் காத்திருக்கின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனையை அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்திருந்தது. பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தின் மீது கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருந்து தீவிரவாதிகள் மற்றும் கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனையை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி முதல் மீண்டும் நிறைவேற்றி வருகிறது.

தற்கொலை படை தாக்குதல், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல், அப்பாவி மக்களை கொன்று குவித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 12 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்கள் கராச்சி உள்பட ஆறு நகரங்களில் உள்ள சிறைகளில் மரண தண்டனை கைதிகளாக இருந்தனர்.
இந்நிலையில் தீவிரவாதம், பாரட் லேன் மசூதியில் தாக்குதல், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ் தலைமையகம் அமைந்துள்ள முல்தானில் தாக்குதல், சட்ட அமலாக்க முகமைகளின் மீது தாக்குதல், லாகூரில் மக்களை கடத்தி கொலை செய்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
இதனையடுத்து, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர், பைசலாபாத், ராவல்பிண்டி, ஜங், மியான்வாலி மற்றும் அட்டோக் ஆகிய வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 9 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவ பள்ளி மாணவர்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ நீதிமன்றங்கள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பெரும் கொலை தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்க பாராளுமன்றத்தில் 21 வது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications