பாகிஸ்தானில் ஓடிப் போய் திருமணம் செய்த ஜோடி தலை துண்டித்து கொலை
லாகூர்: பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பெண் வீட்டாரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் முவாபியா பீபி(23). அவர் பக்கத்து கிராமமான ஹசனாபாத்தைச் சேர்ந்த சாஜத் அகமதை(27) காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே முவாபியா கடந்த 18ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி நீதிமன்றத்தில் சாஜதை திருமணம் செய்து கொண்டார்.
முவாபியா திருமணம் முடிந்து ஹசனாபாத்தில் இருப்பது அவரது குடும்பத்தாருக்கு நேற்று தெரிய வந்தது. இதையடுத்து முவாபியாவின் தந்தை தில்ஷாத் உள்பட 7 பேர் ஹசனாபாத் கிளம்பிச் சென்றனர். அங்கு அவர்கள் முவாபியா மற்றும் அவரது கணவரை வீட்டுக்குள் இருந்து இழுத்து வந்து நடுத்தெருவில் வைத்து துன்புறுத்தி அவர்களின் கை, கால்களை கட்டிப் போட்டு தலையை வெட்டி கொலை செய்தன. இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் கூட அதை தடுக்க முன் வரவில்லை.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 7 பேரையும் கைது செய்தனர். சாஜத் முறைப்படி வந்து பெண் கேட்கும் முவாபியா வீட்டில் சம்மதிக்கவில்லையாம். அதன் பிறகே அவர்கள் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்ய முடிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.