ஹபீஸ் சையது மீது ஒரே நேரத்தில் பாய்ந்த 23 வழக்குகள்.. அட பாகிஸ்தானா இதை செய்தது? காரணம் இருக்கு பாஸ்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் தொடர்புள்ள பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டி கொடுத்தது உள்ளிட்ட 23 வழக்குகள் தீவிரவாதி ஹபீஸ் சையத் மீது பாய்ந்துள்ளது. சர்வதேச நெருக்கடிகளை தொடர்ந்து, பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பயங்கரவாத நிதியுதவிக்கு நிதி திரட்டுவதற்கு ஐந்து அறக்கட்டளைகளைப் பயன்படுத்தியதற்காக ஜமாத்-உத்-தவ்வா தலைவர் மற்றும் 12 கூட்டாளிகள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பயங்கரவாத தடுப்புத் துறை (சி.டி.டி) ஜமாத்-உத்-தவ்வா (ஜே.யு.டி) தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது அமைப்பின் மற்ற உறுப்பினர்கள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் செயல்பட்டு வரும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பஞ்சாப் சி.டி.டி மேற்கொள்ளும் இரண்டாம் கட்ட நடவடிக்கை இதுவாகும்.
1. தாவத் இர்ஷாத் அறக்கட்டளை
2. மோவாஸ் பின் ஜபல் அறக்கட்டளை
3. அல்-அன்ஃபால் அறக்கட்டளை
4. அல்-மதீனா ஃபவுடேஷன் டிரஸ்ட்
5. அல்-ஹமட் அறக்கட்டளை
இந்த அறக்கட்டளைகள் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்து வந்தது தெரியவந்ததால் அவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் லாகூர், குஜ்ரான்வாலா, முல்தான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.
ஜமாத்-உத்-தவ்வாவின் நான்கு முக்கிய உறுப்பினர்கள் பெயர்கள் இந்த வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் பெயர்கள் இவைதான்:
1. ஹபீஸ் முகமது சயீத்
2. அப்துல் ரஹ்மான் மக்கி (ஹபீஸ் சயீத்தின் மைத்துனர்)
3. அமீர் ஹம்ஸா
4. முகமது யஹ்யா அஜீஸ்
தீவிரவாதிகளுக்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று, ஃபினான்ஷியல் ஆக்ஷன் டாஸ்க் படை பாகிஸ்தானை க்ரே பட்டியலில் வைத்துள்ளது. அக்டோபருக்குள் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்ப்போம் என்று அந்த அமைப்பு எச்சரித்திருந்தது.
இந்த நிலையில்தான், ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுத்துள்ளது பாகிஸ்தான்.












Click it and Unblock the Notifications