ஷரீப் சொன்னபடி விடுதலை.. .இன்று 59 இந்திய மீனவர்களை விடுவித்த பாக்.
கராச்சி: மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கலந்துகொள்ளவிருக்கும் வேளையில் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்த 59 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மோடி பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நாளை டெல்லி வருகிறார். மேலும் வரும் செவ்வாய்க்கிழமை இருநாட்டு உறவு குறித்து ஷரீபும், மோடியும் பேசவிருக்கிறார்கள்.
இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மாலிர் சிறையில் இருந்த 59 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாலிர் சிறையின் எஸ்.பி. செய்யது நசிர் ஹுசைன் கூறுகையில்,
உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் உத்தரவின்பேரில் இந்திய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.