மருந்து வாங்க கூட பணம் இல்லை.. துடித்து மடியும் பாகிஸ்தான் மக்கள்.. உச்சக்கட்ட அவலம்!
பாகிஸ்தானை பொறுத்தவரை 95 சதவீத மருந்துகளை அந்நாடு வெளிநாடுகளில் இருந்துதான் வாங்கி வருகிறது. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து 90 சதவீதம் மருந்துகள் வாங்கப்படுகின்றன.
இஸ்லாமாபாத்: வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசிய மருந்துகள் கூட வாங்க பாகிஸ்தான் அரசிடம் பணம் இல்லாததால், அந்நாட்டு மக்கள் போதிய சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடும் உணவுப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தற்போது மருந்து கூட வாங்க முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் அடித்தளமான சுகாதாரத் துறையே பாகிஸ்தானில் கேள்விக்குறியாகி விட்டதால், அந்த நாட்டை மீட்பது சிரமம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மீளாத்துயரில் பாகிஸ்தான்
கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர வெள்ளம், தவறான பொருளாதாரக் கொள்கை, வரைமுறையில்லாமல் வாங்கிய கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் இன்றைக்கு மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணியும், கஜானாவும் மொத்தமாக காலியானதால் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் திவாலானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இருவேளை உணவு கூட இல்லை
நிதிப் பற்றாகுறையால் வெளிநாடுகளில் இருந்து உணவுப்பொருட்களை வாங்க கூட பணம் இல்லாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இதனால் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்போதைய சூழலில், பாகிஸ்தானில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தால் இரு வேளை உணவு உண்பதே கடினமானதாக மாறிவிட்டது. இதன் காரணமாக, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை வாங்க மக்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள்.

காலியான மருந்துகள்
இந்நிலையில், பாகிஸ்தானில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருந்துகளே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை 95 சதவீத மருந்துகளை அந்நாடு வெளிநாடுகளில் இருந்துதான் வாங்கி வருகிறது. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து 90 சதவீதம் மருந்துகள் வாங்கப்படுகின்றன. தற்போது பாகிஸ்தான் அரசிடம் வெளிநாட்டு செலாவணி இல்லாததால் மருந்துகளை இறக்குமதி செய்ய முடியவில்லை.

அதிகரிக்கும் மரணங்கள்
குறிப்பாக, காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் பாராசியூட்டமல், சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின், வலி நிவாரணியாக பயன்படும் ப்ரூஃபென் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் கூட மருத்துவமனைகளில் இல்லை. இதனால் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, மருந்து இல்லாமல் விஷக்காய்ச்சலுக்கு ஆளாகி மரணித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், மயக்க மருந்து இல்லாததால் இதயம், மூளை, புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கான அறுவை சிகிச்சைகளும் தள்ளிப்போடப்பட்டு வருகின்றன. இதனால் நோயாளிகள் கொத்து கொத்தாக பாகிஸ்தானில் இறந்து வருகின்றனர். இந்த நிலை நீடிக்கும்பட்சத்தில், பாகிஸ்தானை மீட்பது என்பதே சிரமமான காரியமாக மாறிவிடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications