"லண்டன் பிளான்!" கிட்ட நெருங்கிய போலீஸ்.. உடனே மாஸ்க்குடன் களத்தில் குதித்த இம்ரான் கான்.. திக்திக்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இம்ரான் கானை கைது செய்ய அந்நாட்டு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது குறித்து வேறு சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் இப்போது பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அங்குப் பொருளாதார சிக்கல் ஒரு பக்கம் என்றால் அரசியல் குழப்பம் மறுபுறம் பாகிஸ்தானை வைத்துச் செய்து வருகிறது.
ஏற்கனவே, அங்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. நிலைமை சமாளிக்கச் சர்வதேச நாயனத்திடம் பாகிஸ்தான் உதவி கேட்டுள்ளது.

பாகிஸ்தான்
இதற்கிடையே ஆளும் ஷெரீப் அரசுக்கு எதிராக இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இம்ரான் கான் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கு நல்ல ரெஸ்பான்சும் மக்களிடையே கிடைத்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் அங்குத் தேர்தல் நடைபெறும் நிலையில், இம்ரான் கானுக்கு வரவேற்பு அதிகரிப்பது ஆளும் தரப்புக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இம்ரான் கானை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்ற ஆளும் தரப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

கண்ணீர் புகைக் குண்டு
அதன்படி அவரை ஊழல் வழக்கில் கைது செய்யும் முயற்சியில் அந்நாட்டு போலீசார் இறங்கினர். இதற்காக போலீசார் அவரது வீட்டிற்கும் சென்றனர். இருப்பினும், அவரை கைது செய்த எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் இம்ரான் கான் வீட்டின் முன்பு திரண்டனர். அவர்களின் எதிர்ப்பை மீறி போலீசார் இல்லத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திரண்டிருந்த இம்ரான் ஆதரவாளர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை விரட்டும் நடவடிக்கையில் பாகிஸ்தான் போலீசார் இறங்கினார்.

நீதிமன்றம் உத்தரவு
இரவு முழுக்க இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வந்தது. இம்ரான் ஆதரவாளர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசினர். இதற்கிடையே தற்காலிக நிவாரணமாக, ஊழல் வழக்கில் அவரைக் கைது செய்ய போலீசார் நடத்திய நடவடிக்கையை வியாழக்கிழமை வரை நிறுத்துமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அங்குச் சற்று அமைதியான நிலை திரும்பியுள்ளது. இது தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் இம்ரான் கானுக்கு தீங்கு விளைவிக்க அனுப்பப்பட்ட போலீசாரை மக்கள் விரட்டியடித்துள்ளதாக அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சி ட்வீட் செய்துள்ளது.

லண்டன் திட்டம்
மேலும், இம்ரான் கானின் மக்கள் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக கைது நடவடிக்கை குறித்து இம்ரான் கான் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தன்னை கைது செய்ய சர்வதேச சதி நடப்பதாகக் கூறியிருந்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் இப்போதைய பிரதமரின் சகோதரருமான நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து வைக்கும் "லண்டன் திட்டத்தின்" ஒரு பகுதியாகவே தன்னை போலீசார் கைது செய்ய முயல்வதாகச் சாடினார்.

பரபர பேச்சு
அவர் மேலும் கூறுகையில், "இது லண்டன் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இம்ரானை சிறையில் அடைக்கவும், பிடிஐ (இம்ரான் கான் கட்சி) வீழ்த்தவும், நவாஸ் ஷெரீப் மீதான அனைத்து வழக்குகளையும் முடிக்கவும் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதற்காகத் தான் இப்படிச் செய்கிறார்கள்" என்றார். கடந்த மார்ச் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், இதுபோல அத்துமீறித் தாக்கியது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். லண்டன் திட்டம் என்று இம்ரான் கான் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆக்சிஜன் மாஸ்க்
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் தான் இருந்தார். இதனிடையே லண்டன் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தன்னை கட்டம்கட்ட வேலை நடத்துவதாக இம்ரான் கானும் சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, பொருளாதார சிக்கலால் போராடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு இது மற்றொரு தலைவலியாக மாறியுள்ளது. இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, இம்ரான் கான் தனது வீட்டை சுற்றியிருந்த ஆதரவாளர்களை நேரில் சந்தித்தார். பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்ற சில நிமிடங்களில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தவாறு அவர் வெளியே வந்து தனது ஆதரவாளர்களை நேரில் சந்தித்தார்.

என்ன புகார்
இதை தோஷகானா வழக்கு என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது இது வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பரிசுகள் வைக்கப்படும் அரசாங்க களஞ்சியமாகும். அரசு பொறுப்பில் இருப்போர் வெளிநாடுகளில் இருந்து பெறும் பரிசுகளை இந்த களஞ்சியத்திற்குத் தான் அனுப்ப வேண்டும். ஆனால், அப்படி அனுப்பாமல், தன்னிடம் வைத்துக் கொண்டதாகவே இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இம்ரான் கான் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications