பட்ஜெட் நிதியை குறைத்துக் கொள்வதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு... இம்ரான்கான் பாராட்டு!
இஸ்லாமாபாத்: அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொள்வதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்காக, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அந்நாட்டு மேற்கொண்டு வருகிறது. மேலும், அரசுத் துறை நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைகளை கையாளுமாறும் வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், வரும் 11ந் தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளுடன் அனைத்து அரசு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக செய்தித் தொடர்புத் துறை உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் ட்விட்டரில் முக்கிய செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், "அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம்.
இது எந்த வகையிலும் நாட்டின் பாதுகாப்பை பாதிக்காது. அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் வழக்கம்போல் செம்மையாக எதிர்கொள்வோம். நிதி பற்றாக்குறையை முப்படைகளும் சரியான சிக்கன அணுகுமுறைகள் மூலமாக சமாளிக்கும். பலூசிஸ்தானில் பழங்குடி பகுதிகளின் முன்னேற்றத்தில் பங்குபெறுவது முக்கியமானது," என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் முடிவுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் இவ்வேளையில், ராணுவத்தின் முடிவு மகத்தானது. ராணுவத்தின் முடிவால் சேமிப்பாகும் தொகையை பலுசிஸ்தான் பகுதியில் வாழும் பழங்குடி இன மக்களின் வளர்ச்சிக்கு செலவிடப்படும்," என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவத் சவுத்ரி கூறுகையில்," இது சிறிய விஷயம் இல்லை. வலிமையான அரசு மற்றும் ராணுவ ஒத்துழைப்பின் மூலமாகவே, பாகிஸ்தானின் மிக மோசமான பொருளாதார மற்றும் நிர்வாகத்தில் சீர்திருத்தம் ஏற்படும்," என்று கூறி இருக்கிறார்.
உலகிலேயே ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. அரசாங்கத்தை விட ராணுவம் வலிமையானதாக காட்டிக் கொள்ளப்படும். இந்த நிலையில், அந்நாட்டு ராணுவம் நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொள்வதாக அறிவித்திருப்பது உலக அரங்கில் ஆச்சரியம் தரும் நிகழ்வாக கருதப்படுகிறது.