"அமைதியான நல்லுறவை விரும்புகிறோம்"! ஆனால் காஷ்மீர் பிரச்சினை..பொடி வைத்து பேசிய பாக். பிரதமர் ஷெபாஸ்
இஸ்லாமாபாத் : நாங்கள் இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புகிறோம், ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை நிலையான அமைதி சாத்தியமில்லை என பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் காரணமாக பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவியிழந்த நிலையில், எதிர்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இதன் மூலம் பாகிஸ்தானில் நிலவிய அரசியல் நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்துள்ளது. மார்ச் 6ஆம் தேதி இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிச்சயமற்ற நிலை தொடங்கியது.
முரண்பாடு... கொரோனா பலி 8 மடங்கு அதிகரிப்பு... உலக சுகாதார நிறுவன கணக்கீட்டுக்கு இந்தியா எதிர்ப்பு
ஷெபாஸ் ஷெரீப் கடிதம்
இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதன் மூலம் இந்தியாவுடன் அமைதியான சகவாழ்வை விரும்புவதாக அவர் கூறியுள்ளார். காஷ்மீர் விஷயத்திலும் அவரது நிலைப்பாடு அப்படித்தான் எனவும், குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் வாழ்த்துக்களை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
பிரதமர் மோடிக்கு நன்றி
தமக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஷெரீப், இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவை பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் கூறினார். "பயங்கரவாதமில்லாத மண்டலத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது, இதன்மூலம் நமது வளர்ச்சியில் கவனம் செலுத்தவும், நமது மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்பை உறுதி செய்யவும் முடியும்" என்று முன்னதாக பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
ட்விட்டரில் நன்றி
அதற்கு பதிலளித்த ஷெபாஸ் ஷெரீப், "வாழ்த்துக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வு காண்பது அவசியம். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் தியாகம் அனைவரும் அறிந்ததே. - சமூக வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். " என கூறியிருந்தார்.
அமைதி சாத்தியமில்லை
பதவியேற்ற பிறகு தேசிய சட்டமன்றத்தில் தனது முதல் உரையில் ஷெரீப், "நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம், ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை நிலையான அமைதி சாத்தியமில்லை" என்று கூறினார். பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு சாதகமாகப் பேசி வரும் நிலையில், ஷெபாஸ் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.