பிலாவல் பூட்டோ தலைமையில் அமைதிக்கான குழுவாம்.. இந்தியாவுக்கு போட்டியாக களமிறங்கிய பாக்.!
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. இதேபோல பாகிஸ்தானும் ஒரு குழுவை உருவாக்கி அதற்கு தலைவராக பிலாவல் பூட்டோவை நியமித்திருக்கிறது.
முன்னாள் வெளியுறவு அமைச்சர், 'பாகிஸ்தான் பீபிள்ஸ் பார்டி' எனும் கட்சியின் தலைவர், இளம் வயது அரசியல்வாதி, அடிப்படையில் இந்தியா-பாகிஸ்தான் போரில் ஈடுபாடு இல்லாதவர் என்பதால் பிலாவல் பூட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

பிலாவல் பூட்டோ நியமனம்
இந்தியாபை பார்த்து அப்படியே காபி அடித்து ஒரு குழுவை உருவாக்கியுள்ள பாகிஸ்தான், அதற்கு தலைவராக பிலாவல் பூட்டோவை நியமித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இது தொடர்பாக பிலாவல் தனது x பதிவில், "என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் அமைதியை முன்வைக்க விரும்புகிறது என்றும், அதற்கான குழுவை நான் வழிநடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் தாய் நாட்டுக்காக சேவை செய்வதில் பெருமையடைகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
குழுவை அமைத்த பாகிஸ்தான்
பிலாவல் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் குழுவில், முன்னாள் அமைச்சர்கள் குர்ராம் தஸ்த்கீர் கான் மற்றும் ஹினா ரப்பானி கர், முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி ஆகியோர் உள்ளனர்.
தொடக்கத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை வேண்டாம் என்று பிலாவல் சொல்லி வந்தாலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியபோது, அதற்கு எதிராக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. "நதி நீர் நிறுத்தப்பட்டால், நீருக்கு பதில் அங்கு இந்தியர்களின் ரத்தம் ஓடும்" என்று கூறியிருந்தார். இப்படிப்பட்டவரைத்தான் பாகிஸ்தான் தனது கருத்தை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் தூதுவராக நியமித்திருக்கிறது.
நிலைப்பாட்டில் இந்தியா உறுதி
இந்தியாவை பொறுத்தவரை அப்போதும் இப்போதும் ஒரே நிலைப்பாடுதான். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நம்பும் வகையில் கைவிடும் வரை, இந்தியா மீது தொடுக்கப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் போராகவே கருதப்படும். இப்போது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையும் இதன் அடிப்படையில்தான் நடந்தது.
இது குறித்து சர்வதேச நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்திருந்தது. இருப்பினும் சில நாடுகளுக்கு நேரில் சென்று விளக்கமளிக்க இருக்கிறது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 7 குழுக்களை உருவாக்கியுள்ளது. இந்த குழுக்களுக்கான தலைவர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். அதன்படி,
காங்கிரஸ் எம்பி தலைமையில் குழு
- ரவிசங்கர் பிரசாத் - பாஜக
- பைஜயந்த் பாண்டா - பாஜக
- சசி தரூர் - காங்கிரஸ்
- கனிமொழி - திமுக
- சஞ்சய் குமார் ஜா - ஐக்கிய ஜனதா தளம்
- சுப்ரியா சுலே - தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்)
- ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே- சிவசேனை
ஆகியோரை குழு தலைவராக அறிவித்திருந்தது. ஒவ்வொரு குழுக்களிலும் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த 5-8 எம்பிக்கள் இருப்பார்கள். இந்த குழுக்கள் மே.23ம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
இதில் அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் குழுவை காங்கிரஸ் எம்பி சசி தரூர் வழிநடத்துவார். எகிப்து, கத்தார், எத்தியோப்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு செல்லும் குழுவை சுப்ரியா சுலே வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications