பாகிஸ்தானுக்கு சவுதி கொடுத்த ஜாக்பாட்! ரூ.10 ஆயிரம் கோடி ஆச்சே சும்மாவா! இனி பிரச்சினை இருக்காது
இஸ்லாமாபாத்: கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது அனைவருக்கும் தெரியும். இதனால் சர்வதேச அமைப்புகளிடம் கூட நிதி கேட்க வேண்டிய சூழலில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. இப்படி மோசமான நிதிநிலையில் சிரமத்தை எதிர்கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு ஜாக்பாட் பரிசை சவுதி கொடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கொரோனாவுக்கு பிறகு வரிசையாக பல்வேறு நாடுகளும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டன. பாகிஸ்தானிலும் கூட மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

சவுதி தந்த ஜாக்பாட்:
உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட சரியாகக் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் சர்வதேச நாணய நிதியம். உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் கூட பாகிஸ்தான் உதவி கேட்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டன. இப்படி மோசமான நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு ஜாக்பாட் பரிசை சவுதி கொடுத்துள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் அரசு, SFD எனப்படும் சவுதி ஃபண்ட் ஃபார் டெவலப்மென்ட் உடன் புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த ஓராண்டிற்கு எண்ணெய் இறக்குமதிக்காக 1.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்குத் தங்கு தடையின்றி சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் செல்லும்.

பாகிஸ்தான்:
பாகிஸ்தானும் சவுதியும் சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதை ரேடியோ பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது
முதலாவது ஒப்பந்தம் தான் கச்சா எண்ணெய் தொடர்பானது. "சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கான ஒத்திவைக்கப்பட்ட பணம்" என்ற இந்த ஒப்பந்தம் $1.2 பில்லியன் மதிப்பு கொண்டதாகும். இது தவிர வேறு ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. அதாவது பாகிஸ்தானின் மன்செஹ்ரா என்ற இடத்தில் $41 மில்லியன் மதிப்புள்ள நீர் உள்கட்டமைப்பை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
கையெழுத்து:
பாகிஸ்தான் சார்பில் பொருளாதார விவகாரங்களின் செயலாளர் டாக்டர் காசிம் நியாஸ் மற்றும் சவுதி சார்பில் எஸ்டிஎஃப் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாத் ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் சவூதி தூதர் நவாப் பின் சையத் அல்-மல்கி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர்.
பாகிஸ்தான் இப்போது மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில், கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் deferred அதாவது ஒத்திவைக்கப்பட்ட முறையில் கச்சா எண்ணெய்யைத் தரச் சவுதி முன்வந்துள்ளதாக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம்:
இது தொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ஒப்பந்தம் மூலம் பாகிஸ்தான் அடுத்த ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட கட்டண முறையில் தேவையான கச்சா எண்ணெய்யைப் பெறும். இந்தத் திட்டம், உடனடி நிதிச்சுமைகளைக் குறைக்கும். அதேநேரம் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் இருப்பு உறுதி செய்யப்படும் சூழலில் இது பாகிஸ்தான் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க உதவும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சவுதி நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே வலுவான உறவு இருக்கும் சூழலில், இந்த ஒப்பந்தம் இரு நாட்டு உறவை மேலும் மேம்படுத்துவதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications