இந்தியாவுடன் சேராதீங்க.. ஆப்கானிஸ்தானிடம் மண்டியிட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி.. என்ன நடந்தது?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் கெஞ்சியுள்ளார். இதுபற்றி அவர், ‛‛நம் நாட்டின் சகோதர இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் நட்புறவை விரும்புகிறது. இதனால் ஆப்கானிஸ்தான், இந்தியாவால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதக் குழுக்களான ஃபிட்னா அல்-இந்துஸ்தான் மற்றும் ஃபிட்னா அல்-கவாரிஜ் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம்'' என்று மண்டியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளங்கள், விமான தளங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நிலைக்குலைந்த பாகிஸ்தான் நம் நாட்டிடம் சரணடைந்தது.

பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி நம் நாட்டை தொடர்பு கொண்டு மோதலை நிறுத்துங்கள். எங்களால் தாங்க முடியவில்லை. நாங்களும் தாக்க மாட்டோம் எனக்கூறி கெஞ்சினார். இதையடுத்து நம் நாடு மோதலை நிறுத்துவதாக அறிவித்தது. இதன்மூலம் கடந்த மே 7 ம் தேதி தொடங்கிய மோதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. மோதலில தோற்றாலும் கூட மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் பாகிஸ்தான் வெற்றி வெற்றி என்று கூவி வருகிறது.
அதுமட்டுமின்றி நம் நாட்டுக்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறது பாகிஸ்தான். அந்த வரிசையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி அசீம் முனீர் நம் நாட்டுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகளுக்கான 52வது காமன் டிரெய்னிங் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அசீம் முனீர் பங்கேற்று பேசினார். அப்போது நம் நாட்டின் மீது வழக்கம்போல் விஷத்தை கக்கினார். ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக நம் நாட்டிடம் மண்டியிட்டதை மறந்து அவர் வாய்ச்சவடால் விட்டார். இதுதொடர்பாக அசீம் முனீர் கூறியதாவது:
‛‛நம் நாட்டின் சகோதர இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் நட்புறவை விரும்புகிறது. ஆப்கானிஸ்தான், இந்தியாவால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதக் குழுக்களான ஃபிட்னா அல்-இந்துஸ்தான் மற்றும் ஃபிட்னா அல்-கவாரிஜ் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். இந்தியா இப்பகுதியில் பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளராக உள்ளது. பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாது.
இந்தியாவின் முன்பு நாம் ஒருபோதும் தலை வணங்கவில்லை எதிர்காலத்திலும் தலை வணங்க மாட்டோம். இந்தியாவில் உள்நாட்டு பிரச்சனை உள்ளது.சிறுபான்மையினருக்கு குறிப்பாக இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைகள் நடக்கிறது. இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்று பொய்களை கூறி வாய்ச்சவடால் விட்டுள்ளார்.
பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் தனி நாடாக நம்மிடம் இருந்து பிரிந்தது. இப்போது இஸ்லாமிய நாடாக அடையாளப்படுத்தப்படுகிறது. அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஷியாக்கள் மற்றும் அஹ்மதிகள் போன்ற இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர் பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதத்தின் பக்கம் தான் உள்ளது. இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் வளர்த்து விட்டு அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதற்கு சமீபத்திய பஹல்காம் தாக்குதல் உள்பட பல தாக்குதல்களை கூறலாம். ஆனால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் நம் நாட்டின் மீது அபாண்டமாக பழி சுமத்தி உள்ளார்.
மேலும் இந்தியா - ஆப்கானிஸ்தானை எடுத்து கொண்டால் நல்ல நட்பு உள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நிலையில் மோதல் நடந்து வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல் தொடர்ந்து வருகிறது. எல்லையில் தெஹ்ரீக் இ தாலிபான்கள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை சமாளிக்க முடியாத கோழை பாகிஸ்தான் தனது ராணுவ தளபதி மூலம் தற்போது நண்பனாக பார்ப்பதாக ஆப்கானிஸ்தானை சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications