கராச்சியில் கோவிலுக்குள் புகுந்து சாமி சிலையை சேதப்படுத்திய 3 பேர்: அச்சத்தில் இந்துக்கள்
கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கோவில் ஒன்றுக்குள் புகுந்த 3 பேர் சாமி சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் 60 ஆண்டு பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி சல்வார் கமீஸ் அணிந்து தாடி வைத்த 3 பேர் துப்பாக்கிகளுடன் கோவிலுக்குள் நுழைந்துள்ளனர்.

கோவிலுக்குள் இருந்தவர்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டி வெளியேற்றிவிட்டு சாமி சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு வாழும் இந்துக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 21ம் தேதி நடந்தாலும் தற்போது தான் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்தபோது கோவிலுக்குள் மஹாராஜ் ஹிரா லால் என்பவரும் அவரது குடும்பத்தாரும், கோவில் பாதுகாவலர்களும் தான் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஹிரா லால் கூறுகையில்,
சாமி சிலை சேதப்படுத்தப்பட்ட பிறகு பூஜைக்காக மக்கள் கோவிலுக்கு வர அஞ்சுகிறார்கள். சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவர்களை நாங்கள் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. இந்த சம்பவத்தால் வருத்தம் அடைந்துள்ளோம். இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த கோவிலை கட்டியவர் எனது தாத்தா. இந்த கோவிலில் வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications