நெஞ்சு வலியில் துடித்த இந்தியர்.. 8 மணி நேரம் காக்க வைத்த கனடா மருத்துவமனை! பரிதாபமாக பறிபோன உயிர்
ஒட்டாவா: கனடா நாட்டில் நெஞ்சு வலி ஏற்பட்ட இந்தியர் ஒருவரைச் சுமார் 8 மணி நேரம் காக்க வைத்துள்ளனர். உரிய நேரத்தில் சிகிச்சை தராமல் காலம் தாழ்த்தியதால் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். கனடா மருத்துவ உட்கட்டமைப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
இந்தியாவில் மருத்துவ உட்கட்டமைப்பு சரியாக இல்லை எனப் பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால், வெளிநாடுகளில் அதை விடவும் கூட மோசமாகவே மருத்துவ உட்கட்டமைப்பு இருக்கிறது. அங்கு எந்தளவுக்கு மோசமான உட்கட்டமைப்பு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலான ஒரு சம்பவம் தான் இப்போது கனடாவில் நடந்துள்ளது.

உயிரிழப்பு
அங்குள்ள எட்மண்டன் நகரில் அமைந்துள்ள கிரே நன்ஸ் மருத்துவமனையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 44 வயது பிரசாந்த் ஸ்ரீகுமார் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு எமர்ஜென்சி சிகிச்சை வழங்குவதை விட்டுவிட்டு சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வைத்துள்ளனர்.
சிகிச்சைக்காக மணிக் கணக்கில் காத்திருந்த அவர், கடைசியில் சிகிச்சைப் பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். கனடா மருத்துவ உட்கட்டமைப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 22ம் தேதி நடந்துள்ளது. அன்றைய தினம் பணியில் இருந்தபோது பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது.
மருத்துவமனை வந்தார்
இதையடுத்து அவர் உடனடியாக அவசரக்காலச் சிகிச்சைக்காக எட்மண்டனில் உள்ள கிரே நன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது பெயரைப் பதிவு மட்டும் செய்துள்ளனர். இருப்பினும், அவருக்கு உடனடியாகச் சிகிச்சையைத் தரவில்லை. மாறாக நீண்ட காலம் காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டார். மகனின் உடல்நிலை குறித்து தந்தை குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரசாந்த்தின் தந்தை குமார் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தடைந்தார். தந்தையைப் பார்த்த பிரசாந்த், "அப்பா, எனக்கு வலி தாங்க முடியவில்லை" என்று வலியோடு இருக்கிறார்..
அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் இது குறித்துச் சொல்லி இருக்கிறார். தனது மகனுக்கு நெஞ்சு வலி மிக மோசமாகி விட்டதாகவும் உடனடியாகச் சிகிச்சையை ஆரம்பிக்குமாறும் கேட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் எலெக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) செய்துள்ளனர். பெரிய பிரச்சினை இல்லை எனச் சொல்லி பிரசாந்த்தை தொடர்ந்து காத்திருப்பு அறையிலேயே காத்திருக்க வைத்துள்ளனர்.
8 மணி நேரம் காத்திருப்பு
நேரம் செல்லச் செல்ல, பிரசாந்த்திற்கு வலி பொறுக்க முடியவில்லை. வலி அதிகரித்துவிட்டதாகச் சொன்னதால் பிறகு டைலெனால் மாத்திரை ஒன்று மட்டுமே வழங்கியுள்ளனர். இருப்பினும் அவரது ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இது குறித்து அவரது தந்தை கூறுகையில், "ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போனது. எனது மகனின் ரத்த அழுத்தத்தைப் பார்க்கப் பார்க்க நான் கவலையடைந்தேன்.
சுமார் 8 மணி நேரத்திற்கும் மேல் இதே நிலை தான் இருந்தது. அங்கேயே காத்திருந்தோம். அதன் பிறகே சிகிச்சைக்காக எங்களை அழைத்தார்கள். உள்ளே செல்ல பிரசாந்த் எழுந்தான். 10 நொடிகள் கூட ஆகவில்லை. என்னைப் பார்த்துக் கொண்டே நெஞ்சில் கைவைத்தபடி சரிந்துவிட்டான்" என்று கண்ணீருடன் கூறினார்.
மரணம்
பிரசாந்த் சரிந்தவுடன் அங்கிருந்த, செவிலியர்கள் உடனடியாக உதவிக்கு விரைந்துள்ளனர். அவரை காப்பாற்றத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை.. பிரசாந்த் ஸ்ரீகுமார் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட கிரே நன்ஸ் மருத்துவமனை எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. குறிப்பிட்ட நோயாளி குறித்த தகவல்களைக் கூற முடியாது எனச் சொன்ன மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்து வருவதாக மட்டும் கூறியுள்ளது.















Click it and Unblock the Notifications