Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலேசியாவில் தமிழ் அகதிகள் கைதுக்கு பினாங்கு துணை முதல்வர் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி தமிழ் அகதிகளை கைது செய்வதற்கு அந்நாட்டின் பினாங்கு மாகாண துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேராசிரியர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

மலேசியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை புத்துயிர் கொடுத்தனர் என்று காரணம் கூறி நேற்று முன் தினம், தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டதாக மலேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அறிவித்துள்ளார்.

Penang Deputy CM condemns arrest of Tamils

இலங்கையில் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி இந்நாட்டில் தஞ்சமடைந்த தமிழ் அகதிகளை தீவிரவாதிகள் என்று கூறி எந்தவித ஆதரமுமின்றி மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது, தேவையற்ற ஒன்று.

பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களையும் தேடிப்பிடித்து உயிரை எடுக்க துடிக்கும் இலங்கை இனவெறி அரசுக்கு, வேலை செய்கின்றதா மலேசிய காவல்துறை?
.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றாக தோற்கடிப்பட்டுவிட்டதாகக் கூறி இலங்கை அரசாங்கம் வெற்றிவிழாவே கொண்டாடிவிட்ட நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க விளைகிறார்கள் என்று கூறி மூன்று தமிழர்களை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது, முற்றிலும் வேடிக்கையான ஒன்றாகும்.

2009 மே 18ஆம் தேதி தமிழர்களின் உரிமைப்போர் கசப்பான முடிவை எட்டியது. பல மூத்த விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர்கள் போரில் கொல்லப்பட்டதோடு, பலர் இலங்கை இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டும், கொடுரமாகக் கொல்லப்பட்டனர். புலிகள் என சந்தேகிக்கப்பட்டோர் பலர் காணாமல் போயினர்; ஆகவே உயிருக்கு அஞ்சி பல தமிழர்கள் வேற்றுநாடுகளிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் அந்நாட்டின் நாடாளுமன்றத்திலேயே அறிவித்து விட்டது. ஆகவே விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது என்பது இலங்கை அரசாங்கத்தின் கட்டுக்கதைகளுக்குள் ஒன்றாகும்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கெதிரான போர் என்ற கூறிக்கொண்டு, தமிழின அழிப்பை மேற்கொண்ட இலங்கை அரசாங்கம் எண்ணிலடங்கா போர்க்குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை இனவெறி அரசு, தற்பொழுது அனைத்துலக அளவில் நெருக்கடியான சூழலில் மாட்டிக்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் புரிந்துள்ள போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை குறித்து சுயேட்சையான அனைத்துலக விசாராணை நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பும் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை அனைத்துலகளவில் விசாரணை நடத்த வேண்டும் என்ற அழுத்தத்தை உபயோகித்து வரும் வேளையில், இலங்கை அரசாங்கம், இந்த அனைத்துலக அழுத்தங்களிலிருந்து தப்பிக்கவே, விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உயிர்ப்பிக்கின்றது என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

அக்காரணத்தைக் கூறி, அண்மையில் கூட மூன்று தமிழர்களை விடுதலைப்புலிகள் என்று கூறி சுட்டுத்தள்ளியுள்ளது இலங்கை அரசாங்க இராணுவம்.

விடுதலைப் புலிகள்தானா? விவாதிக்க தயார்

இதனிடையே, விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உயிர்ப்பிக்கின்றது என்ற கட்டுக்கதையைக் கூறி அனைத்துலக அழுத்தங்களிலிருந்து விடுபட இலங்கை இனவெறி அரசு எத்தனித்துள்ளது. இப்பொழுது அந்த கட்டுக்கதையை அனைத்துலக மட்டத்திற்குக் கொண்டு சென்று, மனித உரிமை மீறல்கள் குற்றசாட்டுகளிலிருந்து விடுபட இலங்கை அரசாங்கம் முயல்கின்றது.

அம்முயற்சிகளின் வெளிப்பாடாகவே, கடந்த சில மாதங்களுக்கு முன் மலேசியாவிற்கு மிக இரகசியமாக வருகை புரிந்த போர்க்குற்றவாளி கோத்தபாய இராஜபக்சே, மலேசிய அரசாங்கத்திடம் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான அமைப்புகள் என்று கூறி சில பொது இயக்கங்கள் மற்றும் தனிநபர்களுடைய பெயர்களைக் கொண்ட பட்டியல் ஒன்றைக் கையளித்துள்ளான். அந்த பட்டியலின் அடிப்படையிலேயே, நேற்று முன்தினம் மூன்று தமிழ் அகதிகளை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது.

உயிருக்கு அஞ்சி அன்னிய நாடுகளில் தஞ்சமடைவோருக்கு அகதிகள் என்ற அடையாளத்தை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையம் வழங்கும். அவ்வாறு அகதிகள் என அடையாள அட்டையைக் கொண்டுள்ள இவர்களையே கைது செய்து விட்டு, இல்லாமல் போய்விட்ட இயக்கத்தை உயிர்ப்பிக்கிறார்கள் என்று உளறுகின்றது மலேசிய காவல்துறை.

அதாவது, இலங்கை இனவெறி அரசு நடத்தும் கண்ணாமூச்சி நாடகத்தில், இலங்கை அரசாங்கம் விரித்துள்ள நயவஞ்சக வலையில் மலேசியா விழுந்துள்ளது.

மலேசியாவில் வாழும் தமிழர்களில் 90%-க்கும் மேற்பட்டோர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள்தான்; அவர்கள் அத்தனைப் பேரையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று மலேசிய அரசாங்கம் கைது செய்யுமா? கைது செய்யப்பட்டுள்ள அம்மூன்று பேரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயன்றார்கள் என்றுக்கூறும் தேசிய காவல்துறை தலைவர் அதனை பொதுமக்களுக்கு நிருபிக்க முடியுமா?

போர்க்குற்றவாளி இலங்கை இனவெறி அரசு கூறுவதுதான் உண்மை என்று அடம்பிடித்தால், அதுகுறித்து உள்துறை அமைச்சரோ, அல்லது தேசிய காவல்துறை தலைவரோ என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளனரா?.

இப்பொழுது விடுதலைப்புலிகள் எனக்கூறி மலேசிய காவல்துறை கைது செய்துள்ளோரை, இலங்கை அரசிடம் கையளிக்குமானால், அவர்கள் கொல்லப்படுவார்கள்; அல்லது மர்மமாக காணாமல் போவார்கள். ஆகவே, இலங்கை அரசாங்கத்தின் நயவஞ்சக செயலுக்கும், படுபயங்கரமான மனித உரிமை மீறல்களுக்கும் உடன்போகாமல், மலேசிய அரசாங்கம், கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அகதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் இராமசாமி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+