அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பினத்தவர் சுட்டுக் கொலை: மக்கள் போராட்டம்
அரிசோனா: அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த மாத்திரை டப்பாவை துப்பாக்கி என்று நினைத்த வெள்ளைக்கார போலீஸ்காரர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டார்.
அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள பெர்குஷனில் டாரன் வில்சன் என்ற வெள்ளைக்கார போலீஸ்காரர் ஆயுதம் இன்றி இருந்த கருப்பினத்தைச் சேர்ந்த பிரவுன் என்பவரை சுட்டுக் கொன்றார். இதனால் பெர்குஷனில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் வெள்ளைக்கார போலீஸ்காரர் ஒருவர் கருப்பினத்தவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

போலீசார் பீனிக்ஸ் நகரில் திருட்டு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த காரில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் அந்த காரை நோக்கி சென்று உள்ளிருந்தவர்களை வெளியே வருமாறு கூறினார். காரில் இருந்த கருப்பினத்தவரான ருமைன் பிரிஸ்பன் வெளியே வந்தார். அப்போது அவர் காரில் இருந்து எதையோ எடுத்து தனது பாக்கெட்டில் போட்டார். அவர் பாக்கெட்டில் வைத்தது துப்பாக்கி என போலீஸ்காரர் நினைத்தார்.
இந்நிலையில் பிரிஸ்பன் ஓட அவரை போலீஸ்காரர் துரத்திப் பிடித்து கட்டி உருண்டனர். அப்போது போலீஸ்காரர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பிரிஸ்பனை இரண்டு முறை சுட்டார். இதில் பிரிஸ்பன் பலியானார். அதன் பிறகு அவரது உடலை பரிசோதித்தபோது தான் அவரது பாக்கெட்டில் இருந்தது மாத்திரை டப்பா என்பது தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரிஸ்பன் கருப்பினத்தவர் என்பதால் தான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications