பூமி எப்போது அழியும்? எப்படி அழியும்! காரணத்தை துல்லியமாக அடித்து சொல்லும் ஆய்வாளர்கள்! ஷாக்
டொனோஸ்டியா: நாம் வாழும் பூமி உட்பட ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் எப்போது அழியும்.. அது எப்படி அழியும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை முன்வைத்துள்ளனர். பிக் க்ரஞ்ச் எனப்படும் மாபெரும் சுருக்கம் ஏற்பட ஆரம்பிக்கும் என்றும் அதுவே பிரபஞ்சத்தின் அழிவாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நாம் வாழும் பூமி, சூரியன், சோலார் சிஸ்டம், அனைத்துக் கிரகங்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது தான் பிரபஞ்சம். இது உருவானது முதலே தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இதற்கிடையே இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் எப்படி அழியும் என்பது தொடர்பாக இயற்பியலாளர்கள் சில முக்கிய கணிப்புகளை முன்வைத்துள்ளனர். அதில் நமது பிரபஞ்சம் "பிக் க்ரஞ்ச்" (Big Crunch) எனப்படும் ஒரு மாபெரும் சுருக்கத்தால் முடிவுக்கு வரும் என்று இயற்பியலாளர்கள் கணித்துள்ளனர்.

பிரபஞ்சம் எப்போது அழியும்?
டொனோஸ்டியா சர்வதேச இயற்பியல் மையத்தைச் சேர்ந்த ஹோங் நான் லூ, ஷாங்காய் ஜியோ டோங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூ-செங் கியூ, மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹென்றி டை ஆகிய ஆய்வாளர்கள் இது குறித்த ஆய்வை சமர்ப்பித்துள்ளனர். அதில் பிரபஞ்சத்தின் விரிவாக்கத்திற்குக் காரணமாக இருக்கும் மர்மமான டார்க் எனர்ஜி காலப்போக்கில் தனது இயல்பை மாற்றிக் கொள்ளும் என்றும் அதுவே பிரபஞ்சம் அழியவும் காரணமாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
என்ன நடக்கும்?
அதாவது இந்தப் பிரபஞ்சம் இப்போது தொடர்ச்சியாக விரிவடைந்து வருகிறது. டார்க் எனர்ஜி காரணமாகப் பிரபஞ்சம் இப்படித் தொடர்ந்து சீரான வேகத்தில் விரிவடைந்து வருகிறது. இப்படி விரிவடையும் போக்கு தான் சுமார் 11 பில்லியன் ஆண்டுகளில் நிறுத்திவிடும் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு ரிவர்ஸ் கியர் போட்டது போல இது சுருங்க ஆரம்பிக்குமாம். இறுதியில் அதன் சொந்த ஈர்ப்பு விசை காரணமாகவே ஒரு பெரும் சுருக்கம், அதாவது Big Crunch ஏற்பட்டு, பிரபஞ்சம் அழியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் மொத்த ஆயுட்காலம் சுமார் 33.3 பில்லியன் ஆண்டுகள் என இந்த ஆய்வு கூறுகிறது. பிக் பேங் நிகழ்ந்து 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்தப் பிரபஞ்ச சுருக்கம் நிகழ இன்னும் 20 பில்லியன் ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
என்ன பார்முலா?
100 ஆண்டுகளுக்கு முன்பு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய "காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட்" என்பதுடன் புதிய டேட்டாவை சேர்க்கும்போது இந்த முடிவுகளே தங்களுக்குக் கிடைப்பதாக ஆய்வாளர் ஹேன்றி டை கூறுகிறார். இது குறித்து டை மேலும் கூறுகையில், "காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட் எப்போதும் பாசிட்டிவாகவே இருக்கும் எனப் பொதுமக்கள் நம்பினர். ஆனால், புதிய ஆய்வுகளில் அதற்கு மாறான தகவல்கள் கிடைக்கிறது.
புதிய டேட்டாவை வைத்துப் பார்க்கும்போது காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட் நெகட்டிவாக மாறிவிட்டது தெரிகிறது. பிரபஞ்சம் ஒரு பெரிய சுருக்கத்தின் (big crunch) மூலம் முடிவை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது" என்றார். கடந்த செப்டம்பர் மாதம் "ஜர்னல் ஆஃப் காஸ்மாலஜி அண்ட் ஆஸ்ட்ரோபார்ட்டிக்கிள் பிசிக்ஸ்" இதழில் வெளியிடப்பட்ட "தி லைஃப்ஸ்பேன் ஆஃப் அவர் யூனிவர்ஸ்" என்ற ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியர் தான் இந்த டை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து என்ன நடக்கும்!
பிரபஞ்சம் தற்போது 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக உள்ளது. அது தொடர்ச்சியாக விரிவடைந்து வருகிறது. தற்போதைய மாதிரிகளின்படி வரும் காலத்தில் இதில் இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே நடக்கும். ஒன்று காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட் எப்போதும் பாசிட்டிவாக இருந்து அது தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே போகும்.
அல்லது காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட் ஒரு கட்டத்தில் நெகட்டிவாக மாறும். இதனால் பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன் அது விரிவடைவது நின்றுவிடும். பிறகு அது சுருங்கி, இறுதியில் பூஜ்யமாகச் சிதைந்துவிடும். இந்தச் சுருங்கும் பிராசஸை தான் ஆய்வாளர்கள் big crunch என்கிறார்கள். இதுவே பிரபஞ்சத்தின் முடிவாக இருக்கும் என டை சொல்கிறார்.












Click it and Unblock the Notifications