ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி.. கூடவே ஜின்பிங்.. ஆஹா.. டிரம்ப் கண்ணை உறுத்துமே!
பெய்ஜிங்: இன்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரத்துக்கு மத்தியில் ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுள்ளார். மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

நேபாள பிரதமர் கே.பி.ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவையும் சந்தித்து கலந்துரையாடினார் பிரதமர் மோடி. கடந்த ஜூலை மாத இறுதியில் மாலத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு 60-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் முகமது முய்சுவை அவர் சந்தித்து பேசியுள்ளார்.
மேலும், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலியை மாநாட்டு அரங்கில் சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் கைகுலுக்கி மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். மேலும் வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்னை சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் உரையாடலை நிகழ்த்தினார். அப்போது ராணுவம், வர்த்தகம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வியட்நாம் உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்.
மியான்மரின் மூத்த ராணுவ அதிகாரி மின் ஆங் லையிங்கை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகளை நீட்டிப்பதற்கு வாய்ப்புள்ள துறைகள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் அதிபர் டோகாயேவ் உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில், SCO மாநாட்டுக்கு இடையே இன்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த சந்திப்பின்போது சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி கலந்துரையாடினர். அப்போது இந்தியா - சீனா- ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு குறித்தும், உறவு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இந்த சூழலில், இன்று ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்தும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய புதினை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications