ஐ.நா. மாநாட்டில் பரஸ்பரம் கையசைத்து கொண்ட பிரதமர் மோடி- பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இருவரும் பரபஸ்பரம் கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர்.
அமெரிக்காவுக்கு 5 நாள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச்சபை கூட்டம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு, அமெரிக்கா வாழ் இந்தியர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மேலும் அமெரிக்கா அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கேமரூன், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் எந்த ஒரு சந்திப்பையும் அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடி நடத்தவில்லை.
நியூயார்க்கில் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்த போதும் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. இந்த நிலையில் நியூயார்க்கில் ஐ.நா. அமைதிகாப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டு அரங்குக்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடி வந்து தமக்கான இருக்கையில் அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மோடிக்கு எதிர்புறம் இருந்த இருக்கையில் அமருவதற்கு முன்னதாக மோடியைப் பார்த்து கையை அசைத்தார்.
பிரதமர் மோடியும் உட்கார்ந்தபடியே பரஸ்பரம் கையசைத்து புன்னகைத்தார்.
பிரதமர் மோடியும் நவாஸ் ஷெரீப்பும் கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவின் உஃபா நகரில் பிரிக்ஸ் மாநாட்டின் போதுதான் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசியிருந்தனர். அதன் பின்னரும் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு தலைவர்களிடையே அமெரிக்காவில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறாது என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.