'மகாத்மா காந்தி ஒரு சகாப்தம்' - ஆஸி. பிரிஸ்பேன் நகரில் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி புகழாரம்!
பிரிஸ்பேன்: மகாத்மா காந்தி ஒரு சகாப்தம் என்று ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மகாத்மா காந்தி சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
பிரிஸ்பேன் நகரில் நேற்று தொடங்கிய ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தியர்கள் அதிகம் வாழும் ரோமா பார்க் பகுதியில் மகாத்மா காந்தியின் சிலையை மோடி இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய மக்கள் குவிந்திருந்து பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடி அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பிரதமர் மோடியை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என ஏராளமான இந்தியர்கள் பிரதமர் மோடியை காண வந்திருந்தனர்.
சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
போர்பந்தரில் அக்டோபர் 2-ந் தேதி காந்தி என்ற ஒரு தனிமனிதர் பிறக்கவில்லை. அக்டோபர் 2-ந் தேதி ஒரு சகாப்தம் பிறந்தது.
நான் எப்போதும் மகாத்மா காந்தியின் கொள்கை மற்றும் தத்துவத்தை நம்புகிறேன். இந்திய சமூகத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், ஒத்துழைக்கும் பிரிஸ்பேன் மேயருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிரதமராக பதவியேற்ற பின்னர் மகாத்மா காந்தி குறித்து அதிகமாக பேசுகிறேன் என்று இந்தியாவில் நடக்கிறது விவாதம் நடைபெற்று வருகிறது.
நான் குஜராத் மாநில முதல்வர் ஆகுவதற்கு முன்னதாகவே, எப்போதும் காந்தியின் கொள்கை மற்றும் தத்துவத்தை நம்புகிறேன். மகாத்மா காந்தி, இயற்கையை விரும்பினார், இயற்கை சுரண்டலுக்கு எதிராக இருந்தார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் இதனை கூறினார். அதன்படி வாழ்ந்தார்.
வன்முறையில்லாத பாதையினை அவர் நமக்கு காட்டியுள்ளார். அவர் நமது நடவடிக்கையில் மட்டுமின்றி வார்த்தையிலும் வன்முறை இருக்க கூடாது என்று நம்பிக்கையுடன் இருந்தார். அவருடைய பாதையினை உலகம் பின்பற்றியிருந்தால், நாம் அதிகமான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம்.
தற்போது பல நிறுவனங்கள் ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றன, அவை அனைத்து தவிர்க்கப்பட்டிருக்க முடியும். மனித நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும். எல்லோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications