கோர்ட் சென்ற இம்ரான் கான்.. வீட்டிற்குள் புகுந்து ஆதரவாளர்களை தாக்கிய போலீஸ்..பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானில் தனது வீட்டிற்குள் புகுந்து ஆதரவாளர்களை போலீசார் தாக்கியதாக இம்ரான் கான் போலீசார் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு ஆஜராக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதும் அவரது வீட்டிற்குள் புகுந்த போலீசார், இம்ரான் கான் ஆதரவாளர்களை தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ பதிவுகளையும் இம்ரான் கான் வெளியிட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் என்றால் அரசியல் குழப்பம் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்னை முட்டும் அளவிற்கு உள்ளது. இதனால், நிலைமை சமாளிக்கச் சர்வதேச நாணய நிதியிடத்திடம் பாகிஸ்தான் முறையிட்டுள்ளது.

ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பகீரத பிரயத்தனம் செய்து கொண்டு இருக்கும் பாகிஸ்தானில் அரசியல் குழப்பத்தாலும் பரபரப்பு ஏற்பட்டு வருவது அந்த நாட்டு மக்களை அதிர வைக்கும் விதமாக அமைந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 2018- ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஜாமீனில் வெளியில் வர முடியாத
இந்த வழக்கில் இம்ரான் கான் அஜராவதற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனாலும் இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள பாகிஸ்தான் போலீசார் சென்றனர். இதையடுத்து இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள வீட்டுக்கு போலீசார் சென்றனர்.

நேரில் ஆஜரான இம்ரான் கான்
அப்போது போலீசாருக்கும், இம்ரான்கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையும் வெடித்ததால் அங்கு போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, இம்ரான் கான் மீதான கைது உத்தரவை நிறுத்தி வைத்து இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இம்ரான் கான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். சில வழக்குகளில் இம்ரான்கானுக்கு உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

வீட்டிற்குள் போலீசார் நுழைந்ததாக..
இந்த நிலையில், பரிசுப் பொருட்கள் முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று இம்ரான்கான் இஸ்லமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக சென்றார். இமரான் கான் வீட்டை விட்டு புறப்பட்டதும் அவரது வீட்டிற்குள் போலீசார் நுழைந்ததாக இம்ரான் கான் மனைவி புஷ்ரா பேகம் குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான் கானும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகாரை முன்வைத்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மனைவி தனியாக இருக்கும் போது
இம்ரான்கான் தனது ட்விட் பதிவில் கூறுகையில், "எனது மனைவி புஷ்ரா பேகம் தனியாக இருக்கும் நிலையில் Zaman Park - பகுதியில் இருக்கும் எனது வீட்டிற்குள் பஞ்சாப் மாகாண போலீசார் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். எந்த சட்டத்தின் கீழ் இதை போலீசார் செய்கிறார்கள். தலைமறைவாக உள்ள நவாஸ் ஷெரிப்பை அதிகாரத்திற்கு கொண்டு வரும் லண்டன் திட்டத்தின் ஒரு அங்கம் இது" என்று பதிவிட்டுள்ளார்.

வீடியோவை வெளியிட்ட பிடிஐ கட்சி
இம்ரான் கான் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்து அவரது ஆதரவாளர்களை தாக்கும் வீடியோவை இம்ரான் கானின் பிடிஐ கட்சியும் வெளியிட்டுள்ளது. இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜராக செல்லும் போது இம்ரான் கானின் கான்வாயில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது. எனினும், இம்ரான் கான் சென்ற காருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இம்ரான் கான் திட்டமிட்டபடி இஸ்லமாபாத் சென்றார்.












Click it and Unblock the Notifications