"இந்து சாமி சிலைகள் குறி.." ஒரே இரவில் 12 இந்து கோயில்கள் மீது தாக்குதல்.. உச்சக்கட்ட பரபரப்பு.!
வங்கதேசத்தில் இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
டாக்கா: வங்கதேசத்தில் ஒரே நாளில் 12 இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு வன்முறை ஏற்படுவதைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அவ்வப்போது சிறுபான்மையினராக உள்ள இந்துக்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படும். அதிலும் சரஸ்வதி பூஜை சமயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தாக்குதல் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை சமயத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாகத் தகவல் பரவும். அதைத் தொடர்ந்து அங்கு மோசமான வன்முறை ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் அங்குத் தொடர்ந்து நடக்கிறது.

இந்து கோயில் மீது தாக்குதல்
இதற்கிடையே இப்போது அங்கு ஒரே நாளில் நள்ளிரவில் சுமார் 12 இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு வங்கதேசத்தில் உள்ள தாக்குர்கான் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள 12 இந்துக் கோவில்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மொத்தம் 14 இந்து சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்து கோயில் சிலைகளை அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து சிலை சேதம்
கோயில்களில் இருக்கும் சில சிலைகளை அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர் சில சிலைகளைக் வீசியுள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள இந்து அமைப்பு ஒன்றின் பொதுச்செயலாளர் பித்யநாத் பர்மன் கூறுகையில், "இருளில் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் யார் என்று இப்போது எங்களுக்குத் தெரியவில்லை.. இருப்பினும், உரிய விசாரணை நடத்தப்பட்டு இதில் தொடர்புடையவர்களைத் தண்டிக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை
இப்படி ஒரே நேரத்தில் பல இந்து கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள இந்து தலைவர்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமைதியாக இருக்கும்படியும் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதியளித்து வருகின்றனர்.

குழப்பம்
அங்குள்ள யூனியன் பரிஷத் தலைவர் சமர் சட்டர்ஜி கூறுகையில், "கடந்த காலத்தில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் எதுவும் நடந்ததில்லை.. இப்பகுதி எப்போதும் மத நல்லிணக்கம் இருந்தே வந்துள்ளது. இங்கு முஸ்லிம் சமூகத்திற்கும் எங்களுக்கும் எந்தவித மோதலும் இருந்தது இல்லை.. ஏன் இப்படிச் செய்துள்ளனர் என்று எங்களுக்குப் புரியவில்லை.. குற்றவாளிகள் யார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.. இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

போலீஸ் விசாரணை
பல கிராமங்களில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.. நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க நடத்தப்பட்ட தாக்குதல் இது என்றும் இதில் தொடர்புடைய அனைவர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications