கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்.. யார் இவர்? முழு விவரம்
ரோம்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 88. நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், இன்று காலமானார்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் போப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் யார்? எப்போது போப்-ஆக ஆனார் என்பதை பற்றி இந்த செய்தி விவரிக்கிறது.

பிறப்பு மற்றும் குடும்பம்:
பிறந்த தேதி: 1936ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி.
இடம்: பியூனஸ் ஐர்ஸ், அர்ஜென்டினா
முழுப் பெயர்: ஜோர்ஜ் மாரியோ பெர்கோலியோ
தந்தை: மாரியோ (கணக்காளர்)
தாய்: ரெஜினா சிவோரி
இருவரும் இத்தாலியிலிருந்து அர்ஜென்டினாவுக்கு குடியேறியவர்கள்
இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். இதில் ஒருவர்தான் போப்.
கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை:
இயற்கை வேதியியல் தொழில்நுட்பம் படித்த இவர், மதப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக சேர்ந்தார். அதன் பின்னர் 1958-இல் கத்தோலிக்க மத நிறுவனத்தில் போதகராக சேர்ந்தார். ஆனாலும் அவர் கல்வியை கைவிடவில்லை. ஆனசிலி மற்றும் அர்ஜென்டினாவில் படித்தார். 1963-இல் தத்துவத்தில் பட்டம் பெற்றார். 1964-1966இல், அர்ஜென்டினாவில் மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் உளவியல் வகுப்புகள் எடுத்தார். 1967-1970-இல் தியாலஜி பயின்று பட்டம் பெற்றார்.
போதகராக பயணம்:
1969இல் கத்தோலிக்க ஆசாரியராக மாறினார். 1970-1971இல் இதற்காக ஸ்பெயினில் பயிற்சி எடுத்தார். 1986இல் ஜெர்மனியில் டாக்டரேட் முடித்தார். இதனையடுத்துதான் இவரது சமூக பயணம் தொடங்கியது. அர்ஜென்டினாவின் கோர்டோபா பகுதியில் மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டி பணியை தொடங்கினார். இவரது பணி கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களிடையே கவனம் பெற்றது. அர்ப்பணிப்பும், அன்பும் எவ்வளவு தேவை என்பதை இவரது பணி உணர்த்தியது.
தொடர் பொறுப்புகள்:
எனவே 1992இல் பியூனஸ் ஐர்ஸில் பிஷப்பாக இவர் நியமிக்கப்பட்டார். 1993 மற்றும் 1997-இல் மேலதிக பொறுப்புகளும் இவருக்கு வழங்கப்பட்டன. 1998-இல் பியூனஸ் ஐர்ஸ் அர்ச்சிபிஷப்பாக நியமனம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அர்ஜென்டினாவின் கத்தோலிக்கர்களை வழிநடத்தியதோடு, கிழக்கு மரபு கொண்ட கத்தோலிக்கர்களையும் ஆதரித்தார்.
சர்வதேச அளவில் கவனம்:
இந்த புள்ளியிலிருந்துதான் இவர் சர்வதேச அளவில் கவனம் பெற தொடங்கினார். இதனையடுத்து 2001ல் கார்டினலாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய திருபுமுனை என்றே சொல்லலாம். 2005ல் பேனடிக்ட் XVI திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் குழுவில் பங்கேற்றார். 2013ல் திருத்தந்தையாக (Pope) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு "பிரான்சிஸ்" என்ற பெயர் வழங்கப்பட்டது. இவர் அமெரிக்கா கண்டத்திலிருந்து வந்த முதல் திருத்தந்தை ஆவார். மட்டுமல்லாது முதல் 'ஜெஸ்யூயிட்' என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெஸ்யூயிட் என்பவர்கள் ஏறத்தாழ துறவி வாழ்க்கையை வாழ்பவர்கள். அவர்கள் அதிகாரத்திற்கு வர விரும்ப மாட்டார்கள். ஆனால் 2013ம் ஆண்டு இந்த வரலாற்றை ஜோர்ஜ் மாரியோ பெர்கோலியோ மாற்றினார்.












Click it and Unblock the Notifications