போப் பிரான்சிசுடன் பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பர்க் சந்திப்பு.. நினைவு பரிசும் வழங்கினார்!
வாடிகன் சிட்டி: உலகம் முழுவதிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் ஐ வாடிகன் அரண்மனையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் சந்தித்து பேசினார். அப்போது இணைய இணைப்பை பெற சூரிய சக்தியின் மூலம் இயங்கும் ஆளில்லா விமானத்தின் மாதிரியை, அவருக்கு நினைவுப் பரிசாக அளித்தார் மார்க் ஜுக்கர்பர்க் .
பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பர்க் தனது மனைவி பிரிசில்லா சானுடன் இத்தாலி தலைநகர் ரோம் அருகிலுள்ள வாடிகன் அரண்மனையில் நேற்று போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்து பேசினார்.
போப்பின் இல்லமான சான்ட்டா மார்ட்டா குடிலில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வறுமை ஒழிப்பு, உலகத் தொடர்பு ஆகியவற்றில் இணையவழி பயன்பாட்டின் முக்கியவத்தை விளக்கிய மார்க் ஜுகர்பர்க், இன்டர்நெட் வசதி இல்லாத பகுதிகளில் இணைய இணைப்பு இல்லாத பகுதியில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் 'அக்கிலா' என்ற ஆளில்லா விமானத்தின் மாதிரியை அவருக்கு பரிசாக அளித்தார்.