பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல்? புல்லட் புரூப் ஷீல்ட் உடன் நின்ற எஸ்பிஜி.. உக்ரைனில் என்ன நடந்தது?
கீவ்: இந்தியா- ரஷ்யா இடையே நெருக்கமான உறவு இருப்பதால், உக்ரைனில் பிரதமர் மோடி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், பிரதமர் மோடி உக்ரைனில் இருந்த 7 மணி நேரமும் சிறப்பு கமாண்டோ படையினர் அரண் போல பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு சென்றார். போலந்து நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ரயில் மூலமாக உக்ரைன் சென்றார். ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது.

இத்தகைய சூழலில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம், சர்வதேச அளவில் வல்லமை மிக்க நாடுகளாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. 10 மணி நேரம் ரயிலில் பயணித்து பிரதமர் மோடி, உக்ரைனுக்கு சென்றார். உக்ரைன் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து இரு தலைவர்களும் சந்தித்து உரையாடினார்.
அப்போது, இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அமைதியின் பக்கம் நிற்கிறது என்ற வலுவான மெசேஜையும் மோடி முன்வைத்தார். முன்னதாக உக்ரைனில் பிரதமர் மோடியின் பயண திட்டம் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளது. பிரதமர் மோடி உக்ரைன் சென்றதும், அவருக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது.
உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்தார். அவர்களுடன் உற்சாகமாக கை கொடுத்தார். இதனை தொடர்ந்து கீவ் நகரில் உள்ள அமைதி பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு பாதுகாப்பு படை யினர் (எஸ்பிஜி) புல்லட் புரூப் ஷீல்டை தூக்கி பிடித்த படி பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அரண் போல நின்றுள்ளனர்.
தாக்குதல் முயற்சி ஏதேனும் நடைபெற்றால் அதை முறியடிக்கும் விதமாக முன் கூட்டியே எஸ்பிஜி படையினர் உஷார் நிலையில் இருந்துள்ளனர். இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் மிக நெருக்கமான நட்பை கொண்டுள்ளார். இதனால், இந்தியாவுக்கு எதிரான மனநிலை உக்ரைனில் ஒரு தரப்பினர் இடையே நிலவுவதாக அங்குள்ள இந்திய வம்சாவளியினர் தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர். இதையடுத்தே பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஹை அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனில் பிரதமர் மோடி இருந்த 7 மணி நேரமும் 60 எஸ்பிஜி கமாண்டோக்கள் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பிரதமர் மோடி, காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அமைதி பூங்கா என்பது திறந்த வெளியில் அமைந்துள்ளது. இதனால், அமைதி பூங்கா முழுவதும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
சிறப்பு பாதுகாப்பு படை இயக்குனர் ஆலோஷ்ஷர்மா தலைமையில் 60-க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், நவீனரக துப்பாக்கியுடன் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உக்ரைனில் இருந்த 7 மணி நேரமும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்புடனும், விழிப்புடனும் இருந்துள்ளனர். பிரதமர் மோடி தனது உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு போலந்திற்கு ரயிலில் புறப்பட்ட பிறகே, பாதுகாப்பு படையினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications