1624 பேர் மரணம்.. ஒரு கிராமத்தையே மயானமாக்க திட்டம்.. இந்தோனேசியா சோகம்!
இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக பலியானவர்களின் உடலை மொத்தமாக ஒரு கிராமத்தில் புதைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக பலியானவர்களின் உடலை மொத்தமாக ஒரு கிராமத்தில் புதைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அங்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுனாமி ஏற்பட்டு 8 நாட்கள் ஆகியும் இன்னும் அங்கு நிலைமை சரியாகவில்லை.
தற்போது அங்கு மீட்பு பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. இனியும் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
என்ன நடந்தது
கடந்த 8 நாட்களுக்கு முன் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது.இதனால் சுனாமி ஏற்பட்டது. சுலசேஸி தீவு முழுக்க இதனால் நீர் புகுந்தது.
பலி எண்ணிக்கை
இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 1624 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் உள்ள பலு என்ற பகுதியில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை அங்கிருந்து 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
என்ன செய்ய போகிறார்கள்
இதற்கு மேல் அங்கு பிணங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் எல்லோரையும் அடையாளம் காண்பது கடினம் என்று கூறப்படுகிறது. இவர்களை எப்படி புதைப்பது என்று தெரியாமல் அந்நாட்டு அரசு குழம்பி வருகிறது.
மொத்தமாக புதைக்க போகிறார்கள்
இவர்களுக்காக மொத்தமாக பெரிய கிராமம் ஒன்றை பயன்படுத்த போவதாக தகவல் வருகிறது. இதற்காக அங்கு இருக்கும் மதகுருமார்களிடமும், உள்ளூர் ஆட்சியாளர்களிடம் பேசி வருகிறார்கள். ஒரு கிராமத்தை அப்படியே பிணங்களை புதைக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.