மண்டேலா நினைவு பிரார்த்தனை: பிரணாப், சோனியா இன்று தென் ஆப்பிரிக்கா பயணம்
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் மண்டேலா நினைவு சிறப்பு பிரார்த்தனையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட இந்திய குழுவினர் பங்கேற்கின்றனர்.
நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்ட முன்னாள் தென் ஆப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலா கடந்த வியாழக்கிழமை அன்று மரணம் அடைந்தார். இந்திய அரசு சார்பில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மண்டேலாவின் மறைவுக்கு உலகத்தலைவர்கள் அனைவரும் இரங்கல் செய்தி விடுத்தனர்.

மண்டேலாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி டிசம்பர் 15-ந் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் பிறந்த குனு நகரில் நடக்கிறது. இதில் உலகத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் மண்டேலா நினைவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையிலான இந்திய குழுவினர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய மந்திரி ஆனந்த்சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுகின்றனர். அவர்கள் அனைவரும் தனி விமானம் மூலம் திங்கட்கிழமை இரவு டெல்லியில் இருந்து தென்ஆப்பிரிக்கா செல்கின்றனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங்கும் இந்த குழுவுடன் சேர்ந்து தென்ஆப்பிரிக்கா செல்வார் என்று தெரிகிறது.இவர்கள் அனைவரும் நாளை நடைபெறும் மண்டேலாவின் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.
மத்திய அரசு சார்பில் வருகிற 11-ந்தேதி முதல் 3 நாட்கள் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.












Click it and Unblock the Notifications