வெறும் 100 மீட்டர் தூரத்தில் ஏர்போர்ட்.. அப்படியே ஏரியில் பாய்ந்த பயணிகள் விமானம்! பெரும் விபத்து
தான்சானியா: மோசமான வானிலை காரணமாக தான்சானியா நாட்டின் உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் பாய்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.
உலகில் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக விமான போக்குவரத்து உள்ளது. இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் விமானங்களும் விபத்தில் சிக்குகின்றன.
அப்படித்தான் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியா நாட்டின் உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் பாய்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.
குஜராத் பால விபத்து.. 9 பேருக்கு சிறை - 2 முறை அதே காண்டிராக்டர்! “அன் ஃபிட்” என நீதிமன்றம் கருத்து
விமான விபத்து
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் ப்ரிசிஷன் ஏர். இந்த நிறுவனம் தான்சானியாவின் பல்வேறு பகுதிகளிலும் விமானச் சேவையை வழங்கி வருகிறது. அதன்படி தான்சானியாவின் வடமேற்கு நகரமான புகோபாவில் அமைந்துள்ள ஏர்போர்ட்டிற்கு இன்று ப்ரிசிஷன் ஏர் விமானம் வழக்கம் போலச் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் மொத்தம் 43 பேர் இருந்துள்ளனர்.
மோசமான வானிலை
புகோபாவிற்கு ஏர்போர்ட்டிற்கு மிக அருகே சென்று தரையிறங்கத் தயாரான போது மோசமான வானிலை காரணமாக இன்று அதிகாலை விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள விக்டோரியா ஏரியில் இந்த விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. விமான நிலையம் உள்ள இடத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு போலீார் தெரிவித்து உள்ளனர்.
43 பேர்
விபத்தில் சிக்கிய விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உட்பட 43 பேர் பயணித்து உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். மற்றவர்களையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூழ்கிய விமானம்
இந்த விபத்து தொடர்பான காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. அதில் ஒரு பக்கம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விமானம் பெருமளவு நீரில் மூழ்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. கிரேன்களின் உதவியுடன் விமானத்தைத் தண்ணீரிலிருந்து வெளியே எடுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் சாமியா சுலுஹு ஹசன், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மீட்புப் பணிகள்
இப்போது மீட்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் விபத்து தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று ப்ரிசிஷன் ஏர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த ப்ரிசிஷன் ஏர், 1993இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் இயங்கும் மிக முக்கிய விமான நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். விரைவில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும்.
விமான விபத்துகள்
ஆப்பிரிக்காவில் விமான விபத்துகள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த மார்ச் 2019 இல், அடிஸ் அபாபாவிலிருந்து நைரோபிக்கு வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஆறே நிமிடங்களில் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 157 பேரும் கொல்லப்பட்டனர். அதேபோல 2007இல் ஐவரி கோஸ்ட்டில் இருந்து கென்யா சென்ற கென்யா ஏர்வேஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் 114 பயணிகள் கொல்லப்பட்டனர்.