15 வயதிலேயே “அம்மா”வாகும் ருமேனிய சிறுமிகள்... 2ம் இடத்தில் பல்கேரியா!
போடோசனி, ருமேனியா: ருமேனியாவில் 15 வயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். தாங்களே சிறுமிகளாக இருந்து கொண்டு கைக்குழந்தையுடன் இருப்பது பெரும் சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
ருமேனியாவில் கிட்டத்தட்ட 2000 சிறுமிகள் இளம் தாய்மார்களாக வலம் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு வயது 16க்குள்தான் உள்ளது. சிலர் 12 வயதிலேயே கர்ப்பிணியானவர்கள்.
லொரினா என்ற 15 வயது சிறுமி கூறுகையில், "கடவுள் எனக்கு அழகான மகளைக் கொடுத்துள்ளார். ஆனால் நானே சிறுமியாக இருக்கிறேன். அதுதான் சிரமமாக இருக்கிறது" என்கிறார்.
திட்டமிடாத வாழ்க்கை...
இந்த சிறுமி தனது காதலருடன் வசித்து வருகிறார். திட்டமிடாமல் வாழ்ந்ததால் தான் கர்ப்பமாகி விட்டதாக அவர் கூறுகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே டயானா என்ற இன்னொரு 15 வயது சிறுமியும் வசிக்கிறார். தான் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தபோது கதறி அழுததாக அவர் கூறுகிறார்.
சுதந்திரம் இல்லை...
"என் வாழ்க்கையே மாறிப் போய் விட்டது. என்னால் எனது வயதையொட்டி சிறுமிகளைப் போல சுதந்திரமாக இருக்க முடியவில்லை" என்று கூறுகிறார் டயானா.
புள்ளிவிவரம்...
2013ம் ஆண்டில் ருமேனியாவில் 15.6 சதவீத குழ்தைகள் இளம் தாய்மார்களுக்குப் பிறந்த முதல் குழந்தை என்று புள்ளிவிவரத் தகவல் ஒன்று கூறுகிறது. இதற்கடுத்து பல்கேரியா நாடு வருகிறது. அங்கு 14.7 சதவீதமாக இது உள்ளது.
கிராமத்துப் பெண்கள்...
கடந்த 2014ல் ருமேனியாவில் 18,600 இளம் தாய்மார்கள் பிள்ளைகளைப் பெற்றனர். அவர்களில் 2212 பேர் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். இதில் மூன்றில் 2 பங்குப் பேர் கிராமப் புறங்களில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.